பாமாபாய் அவரின் கடையில் அமர்ந்து ஒரு செருப்பை சரி செய்துக் கொண்டிருக்கிறார். செருப்புத் தைக்கும் இரும்பு அவரின் முன்னால் தரையில் இருந்தது. ஒரு செவ்வக மரக்கட்டையை ஆதரவாக வைத்துக் கொண்டு, திறந்த செருப்பை முனையில் தன் பெருவிரலால் அழுத்திப் பிடித்திருக்கிறார். பிறகு ஊசியை செருகி எடுத்து அதில் நூலை விட்டு வெளியே இழுக்கிறார். ஆறு இழுவைகளில் அறுந்திருந்த துண்டு தைக்கப்பட்டு விட்டது. வருமானம் ஐந்து ரூபாய்.
பாமாபாய் மஸ்தூத் ஒரு தோல் தொழிலாளர். செருப்பு தைப்பவர்.. வறுமையின் அருகே வாழ்கிறார். பல பத்தாண்டுகளுக்கு முன் அவரும் அவரின் கணவரும் மராத்வடா பகுதியின் ஒஸ்மனாபாத் மாவட்டத்தில் நிலமற்ற தொழிலாளர்களாக இருந்தனர். 1972ம் ஆண்டின் பெரும் பஞ்சம் மகாராஷ்டிராவை உலுக்கியபோது விவசாய வேலை இல்லாமல் போனது. வாழ்வாதாரங்களை வறட்சிக்குள் தள்ளியது. எனவே இருவரும் புனேவுக்கு இடம்பெயர்ந்தனர்.
சாலை அல்லது கட்டடக் கட்டுமானம் என எந்த வேலை வந்தாலும் அவர்கள் செய்தார்கள். ஒருநாள் வேலை அந்தக் காலக்கட்டத்தில் இரண்டிலிருந்து ஐந்து ரூபாய் வரை கூலி பெற்றுத் தரும். “நான் சம்பாதித்த எல்லாவற்றையும் கணவரிடம் கொடுத்தேன். அவர் மது குடித்து என்னை வந்து அடிப்பார்,” என்னும் பாமாபாய்க்கு தற்போது வயது 70. இறுதியில் கணவர் அவரை கைவிட்டுவிட்டு வேறொரு மனைவி மற்றும் குழந்தைகளுடன் புனே அருகில் வாழ்கிறார். “என்னைப் பொறுத்தவரை அவர் இருந்தாலும் செத்தாலும் ஒன்றுதான். அவர் என்னை விட்டுச் சென்று 35 வருடங்கள் ஆகிறது.” பாமாபாய்க்கும் இரு குழந்தைகளும் இருந்திருக்கும். ஆனால் பிறந்ததும் இறந்துவிட்டன. “என்னுடன் யாரும் இல்லை. எனக்கு எந்த ஆதரவமும் இல்லை,” என்கிறார் அவர்.
கணவர் சென்றபிறகு, ஒரு சிறு குடிசை அமைத்து செருப்பு தைக்கும் கடை உருவாக்கிக் கொண்டார் பாமாபாய். செருப்பு தைக்கும் திறனை தந்தையிடமிருந்து கற்றுக் கொண்டார். புனேவின் கர்வே சாலையிலுள்ள ஒரு சிறு சந்துக்குள் கடை இருக்கிறது. “நகராட்சி ஊழியர்களால் அழிக்கப்பட்டது. எனவே நான் இக்கடையை மீண்டும் கட்டினேன். அவர்கள் மீண்டும் வந்து உடைத்தார்கள்.”
நம்பிக்கையிழந்த பாமாபாய் அருகே இருக்கும் காலனிவாசிகளிடம் உதவி கேட்டார். “எனக்கு வேறெங்கும் செல்ல வழியில்லை என அவர்களிடம் கூறினேன். வேறெதையும் செய்யவும் முடியாது.” காலனிவாசிகள் நகராட்சி அதிகாரிகளிடம் பேசினர். அவரால் அங்கு தொடர்ந்து வேலை பார்க்க முடிந்தது.








