நான் செல்லும் இடம் நெருங்கியதை கூகுள் மேப்ஸ் என்னிடம் சொல்கிறது. ஆனால் அப்பகுதி எனது நினைவில் இருந்தது போன்றல்லாமல் சிறிது மாறியிருந்தது. கடந்த முறை உப்படா வந்தபோது கடலில் அரிக்கப்பட்டிருந்த பழைய வீடு ஒன்று இருந்ததற்கான அடையாளமே இப்போது இல்லை. “ஓ அந்த வீடா? இப்போது அது கடலுக்குள் இருக்கிறது!” என்கிறார் வங்கக் கடலின் அலைகளை சாதாரணமாக காட்டியபடி டி. மாரம்மா.
2020 மார்ச் தேசிய பொதுமுடக்கத்திற்கு சில வாரங்களுக்கு முன்புதான் மாரம்மா மற்றும் அவரது குடும்பத்தினரை அந்த பழைய கட்டடத்தின், துயரமான பின்னணியில் நான் புகைப்படம் எடுத்தது நன்றாக என் நினைவில் இருக்கிறது. இந்த நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகள் வரை மாரம்மாவின் கூட்டுக் குடும்பம் வாழ்ந்து வந்த பெரிய வீட்டின் மிச்சப் பகுதி மட்டும் ஒரு குறுகிய கடற்கரையில் ஆபத்தாக நின்றது.
“எட்டு அறைகள், மூன்று கொட்டகைகளுடன் [விலங்குகளுக்கானது] அது கட்டப்பட்டது. இங்கு சுமார் நூறு பேர் வரை வசித்து வந்தனர்,” என்கிறார் வயது 50களில் உள்ள, கொஞ்ச காலம் உள்ளூர் அரசியல்வாதியாக இருந்த, முன்னாள் மீன் வியாபாரியான மாரம்மா. 2004ஆம் ஆண்டுன் சுனாமிக்கு முன் ஏற்பட்ட புயலில் கட்டடத்தின் பெரும் பகுதி அடித்துச் செல்லப்பட்டதால் கூட்டுக் குடும்பம் வெவ்வேறு வீடுகளுக்குச் செல்ல நேரிட்டது. அருகில் உள்ள வீட்டிற்கு குடிபெயரும் முன் சில ஆண்டுகள் மாரம்மா அந்த பழைய கட்டடத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.
மாரம்மாவின் குடும்பம் மட்டுமல்ல உப்படாவில் உள்ள கிட்டதட்ட ஒவ்வொரு குடும்பமும் கடல் அரிப்பு காரணமாக ஒருமுறையாவது வீட்டை மாற்றியுள்ளனர். வாழ்ந்த அனுபவங்கள், கடல் பற்றிய உள்ளூர் சமூகத்தின் உள்ளுணர்வின் அடிப்படையில் வீட்டை விட்டு எப்போது வெளியேறுவது என அவர்கள் கணக்கிடுகின்றனர். “அலைகள் முன்நோக்கி வரும்போதே நாங்கள் வீடு கடலுக்குள் சென்றுவிடும் என்பதை கண்டறிந்துவிடுவோம். பிறகு எங்கள் பாத்திரங்கள் போன்றவற்றை ஒரு பக்கம் கொண்டு செல்வோம் [தற்காலிக வீட்டை வாடகைக்கு தேடத் தொடங்குவோம்]. ஒரு மாதத்திற்குள் பழைய வீடு பொதுவாக [கடலுக்குள்] சென்றுவிடும்,” என விளக்குகிறார் ஓ. சிவா. அவர் 14 வயதிலேயே கடலிடமிருந்து தப்பிக்க ஒரு வீட்டில் இருந்து வெளியேறியவர்.















