ஃபோர்ப்ஸ்ஸின் 2021 பட்டியலின்படி இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கடந்த 12 மாதங்களில் 102லிருந்து 140 என்கிற அளவுக்கு அதிகரித்திருக்கிறது. கடந்த வருடத்தில் மட்டும் அவர்களின் ஒட்டுமொத்த சொத்துகளும் ”596 பில்லியன் டாலரளவுக்கு” இரட்டிப்பாகி இருக்கிறது.
இதன் அர்த்தம் என்ன தெரியுமா? 140 தனிநபர்கள், அதாவது ஒட்டுமொத்த மக்கள்தொகையின் 0.000014 சதவிகிதம் பேர், மொத்த உள்நாட்டு உற்பத்தியான 2.62 ட்ரில்லியன் டாலரின் 22.7 சதவிகிதத்தை கொண்டிருக்கிறார்கள் என்பதே.
பெரும்பாலான இந்திய நாளிதழ்கள் ஃபோர்ப்ஸ் செய்தியை ஏற்கும் தொனியில் வெளியிட்டன.
இந்த நாட்டை பற்றிய ஃபோர்ப்ஸ் அறிக்கையின் முதல் பத்தியில் “அடுத்த கோவிட் 19 அலை,” எனத் தொடங்கி, “இந்தியா முழுமையையும் தாக்கிக் கொண்டிருக்கிறது. மொத்த பாதிப்பு 1 கோடியே இருபது லட்சத்தை தாண்டி விட்டது. ஆனால் நாட்டின் பங்குச்சந்தையோ தொற்றை பற்றிய எந்த கவலையும் இல்லாமல் புதுப்புது உச்சங்களை தொட்டது. சென்செக்ஸ் ஒரு வருடத்துக்கு முன் இருந்ததை விட 75% உயர்ந்தது. இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தின் 102 என்பதிலிருந்து 140 ஆக உயர்ந்திருக்கிறது. அவர்களின் மொத்த சொத்து கிட்டத்தட்ட 596 பில்லியன் டாலர் அளவுக்கு இரட்டிப்பாகியிருக்கிறது,” என முடிந்தது.
140 கோடீஸ்வரர்களின் சொத்தும் மனித வள மேம்பாட்டு குறியீடு 7.7 சதவிகிதமாக சுருங்கிய வருடத்தில் 90.4 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. பெரும் எண்ணிக்கையில் புலம்பெயர் தொழிலாளர்கள் நகரங்களிலிருந்து மீண்டும் தங்களின் கிராமங்களுக்கு திரும்புவதை பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில்தான் இத்தகைய சாதனை செய்திகளையும் நாம் பார்க்கிறோம். இடம்பெயர்வோரின் வேலை இழப்புகள் மனித வள மேம்பாட்டு குறியீடுக்கு நன்மை செய்யாது. அதே நேரம் நம் கோடீஸ்வரர்களையும் பெரிய அளவில் பாதிக்காது. அதற்கான ஃபோர்ப்ஸ்ஸின் உத்தரவாதம் நமக்கு இருக்கிறது.
மேலும் கோடீஸ்வரர்களின் சொத்துக் குவிப்பு கோவிட் நெருக்கடிக்கு எதிர்மறையில் இயங்குகிறது. அதிகமாக குவிக்கப்பட்டால், அதிகம் பரவுவதற்கான வாய்ப்பு குறைகிறது.







