மூன்று இளைஞர்கள் கட்டுமான தளத்தில் வேலை பார்த்து விட்டு மாரியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். “15 வருடங்களுக்கு முன்னால் அது நடந்தது,” என அவர்களில் ஒருவர் நினைவுகூருகிறார். “எங்கள் கிராமத்தில் ஆளரவமற்ற ஒரு மசூதியை நாங்கள் ஒருமுறை கடந்தோம். அப்போது உள்ளே என்ன இருக்குமென பார்க்க ஆவல் தோன்றியது.”
தரையில் பாசி படர்ந்திருந்தது. புதர்கள் கட்டுமானத்தில் நிறைந்திருந்தன.
”உள்ளே நுழைந்ததும் எங்களின் மனநிலை மாறியது,” என்கிறார் 33 வயது தினக் கூலி தொழிலாளர். “நாங்கள் அனைவரும் உள்ளே செல்ல வேண்டுமென அல்லா விரும்பியிருக்கலாம்.”
அஜய் பஸ்வான், பகோரி பிந்த் மற்றும் கவுதம் பிரசாத் ஆகியோர் அதை சுத்தப்படுத்துவதென முடிவெடுத்தனர். “காட்டுச் செடிகளை வெட்டி, மசூதிக்கு நாங்கள் பெயிண்ட் அடித்தோம். மசூதிக்கு முன்னால் பெரிய மேடையை கட்டினோம்,” என்கிறார் அஜய். இரவு விளக்கை ஏற்றவும் அவர்கள் தொடங்கினார்கள்.
மூவரும் சேர்ந்து ஓர் ஒலி அமைப்பை நிறுவி, மசூதியின் உச்சியில் ஓர் ஒலி பெருக்கியை தொங்கவிட்டனர். “தொழுகைக்கான அழைப்பை ஒலிபரப்புவதென முடிவெடுத்தோம்,” என்கிறார் அஜய். விரைவில் எல்லா இஸ்லாமியர்களுக்குமான தொழுகை அமைப்பு அன்றாடம் ஐந்து முறை, பிகாரின் நாளந்தா மாவட்டத்தின் மாரி கிராமத்தில் ஒலிக்கத் தொடங்கியது.












