துளு நாட்டின் கர்னால் சாய்பேர் அல்லது பட்டாசுக் கைவினைஞர்கள், கடலோர கர்நாடகத்தின் பல பண்பாட்டு நிகழ்வுகளில் மிகவும் முக்கியப் பங்கு வகிப்பவர்கள். பூத கோலா, திருவிழாக்கள், திருமணங்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள், புதுமனை புகுவிழாக்கள், இறுதிச் சடங்குகள் ஆகியவற்றில் இவர்களது பங்கேற்பு மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வாகும்.
‘கர்னால்’ என்றால் பட்டாசு என்று பொருள். ‘சாய்பேர்’ என்பது முஸ்லிம் நபரை குறிக்கும் சொல்.
தனது தந்தை இந்தக் கலையை தமக்கு கற்றுத் தந்ததாகக் கூறுகிறார் முல்கி நகரைச் சேர்ந்த கர்னால் சாய்பேரான அமீர் உசேன். தமது பரம்பரையில் இந்த தொழிலை ஒவ்வொருவரும் அடுத்த தலைமுறைக்கு சொல்லிக் கொடுத்து இதுவரை கொண்டு வந்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
“பட்டாசுகளை வீசுவதும், கையாளுவதும் - குறிப்பாக பெரிய பட்டாசுகள் - ஆபத்தான வேலை,” என்கிறார் நிதேஷ் அஞ்சான். இவர் கர்நாடகத்தில் உள்ள மணிபால் உயர்கல்விக் கழகத்தில் ஆய்வு உதவியாளராக இருக்கிறார்.
உடுப்பி மாவட்டம், ஆத்ராடி என்ற ஊரைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞரான முஷ்டாக் ஆத்ராடி பட்டாசுகள் செய்து பூதச் சடங்குகளில் வீசுகிறார். குறிப்பாக, இவர் கதோனி எனப்படும் சக்தி வாய்ந்த பட்டாசு செய்வதில் கெட்டிக்காரர். “கதோனி என்பது மாறுபட்ட வேதிப் பொருட்களைக் கொண்டு, உருவாக்கும் வெடிக்கும் பொடி,” என்கிறார் இவர். கதோனி வெடித்தால், நிலமே அதிரும் என்று சொல்லப்படுவது உண்டு.


