அடர் நீல நிற குர்தாவும், எம்பிராய்டரி செய்யப்பட்ட லுங்கியும், மணக்கும் முழம் மல்லிகைப்பூ சுற்றப்பட்ட கொண்டையுமாக சமையலறை நுழைகிறார் எம்.பி. செல்வி எனும் கரும்புகடை எம்.பி. செல்வி பிரியாணி மாஸ்டர். ஊழியர்கள் நிமிர்ந்து பார்க்கிறார்கள், இருந்த சில உரையாடல்களும் நின்றுவிட்டன, ஒரு தொழிலாளி அவரை வரவேற்று கைப்பையை வாங்கிக்கொண்டார்.
60 பேர் கொண்ட இந்த பெரிய சமையலறையில் செல்விதான் எல்லோரும் மதிக்கும் அந்த 'பிரியாணி மாஸ்டர்'. சில நிமிடங்களில் அனைவரும் தங்கள் வேலைக்கு திரும்பினர். வேகமாகவும் திறம்படவும் வேலை செய்தனர். நெருப்பில் இருந்து கிளம்பும் புகையையும் தீப்பொறிகளையும் மறந்தே விட்டனர்.
மற்ற பிரியாணிகளை போல் அல்லாமல், இங்கு மட்டன் பிரியாணி என்பது இறைச்சியும் அரிசியும் ஒன்றாகச் சமைத்து செய்யப்படுகிறது. இந்த பாரம்பரிய பிரியாணியை செல்வியும் அவரது குழுவும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சமைத்து வருகின்றனர்.
“நான் தான் கோயம்புத்தூர் தம் பிரியாணி ஸ்பெசலிஸ்ட்,” என்கிறார் ஐம்பது வயது திருநங்கை. “ஒரே நபராகத்தான் பார்த்துக் கொள்கிறேன். எல்லாவற்றையும் மனதில் குறித்து வைத்துக் கொள்வேன். 6 மாதம் முன்னாடியே எல்லாம் புக்கிங் ஆகிவிடும்.”
எங்களிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது அவர் முன் நீட்டப்பட்டது சட்டுவம்(பெரிய கரண்டி); அதில் வடியும் சாரை வழித்து ருசி பார்த்துவிட்டு ‘சரி’ என ஜாடை செய்கிறார். அதுதான் ஒரே சுவை சோதனை. எல்லோரும் ஆசுவாசம் ஆகிறார்கள்.
“எல்லாருமே என்னை ‘செல்வி அம்மா’ என்று தான் கூப்பிடுவாங்க. ‘திருநங்கை’-யை அம்மா என்று அழைப்பதில் எனக்கு சந்தோசம்” என்று பூரிக்கிறார்.























