வீட்டுக்கு வெளியே இருக்கும் மாமரத்துக்கடியில் சோகமாக அமர்ந்திருக்கிறார் சாரு. மடியில் குழந்தை புரண்டு கொண்டிருக்கிறான். “என் மாதவிடாய் வரும் நேரம் இது,” என்கிறார் அவர். “வந்துவிட்டால் நான் குர்மா கர்ருக்கு செல்ல வேண்டும்.” குர்மா கர் என்பதை ‘மாதவிடாய் குடிசை’ என மொழிபெயர்க்கலாம். மாதவிடாய் காலத்தில் 4-5 நாட்களுக்கு அங்குதான் அவர் தங்குவார்.
தவிர்க்க முடியாத இந்த நிலை சாருவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பெரும் அங்கலாய்ப்பை தருகிறது. ”குர்மா கர்ரில் மூச்சடைக்கும். குழந்தைகளை விட்டு என்னால் தூங்கவே முடியாது,” என்கிறார் அவர் ஒன்பது மாத மகனை அமைதிப்படுத்த முயன்று கொண்டே. அவருக்கு மூன்றரை வயதில் கோமல் (உண்மையான பெயரல்ல) என்றொரு மகள் இருக்கிறார். நர்சரி பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறார். “அவளின் மாதவிடாய் விரைவில் தொடங்கிவிடும். நினைத்தாலே பயமாக இருக்கிறது,” என்கிறார் 30 வயது சாரு. அவரின் மகளும் மாடியா பழங்குடி மக்களின் பாரம்பரிய முறையை பின்பற்ற வேண்டியிருக்குமோ என கவலையுறுகிறார்.
சாருவின் கிராமத்தில் நான்கு குர்மா குடிசைகள் இருக்கின்றன. அவரின் வீட்டிலிருந்து ஒரு குடிசை வீடு 100 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருக்கிறது. தற்போது அவற்றை 27 பதின்வயது பெண்களும் கிராமத்தின் மாதவிடாய் வயது கொண்ட பெண்களும் பயன்படுத்துகின்றனர். “என் தாயும் அவரின் தாயும் அங்கு செல்வதை பார்த்து வளர்ந்த நானும் அதை பயன்படுத்துகிறேன். கோமலும் அந்த துயரை அனுபவிக்க நான் விரும்பவில்லை,” என்கிறார் சாரு.
பழங்குடி இனமான மாடியா மக்கள், மாதவிடாய் பெண்களை அசுத்தமானவர்களாகவும் தீண்டத்தகாதவர்களாகவும் நினைக்கின்றனர். மாதவிடாய் வரும் போது அவர்களை தூர அனுப்பி விடுகின்றனர். “13 வயதிலிருந்து நான் குர்மாவுக்கு சென்று கொண்டிருக்கிறேன்,” என்கிறார் சாரு. பெற்றோரின் வீட்டில் அவர் அப்போது இருந்தார். தற்போதைய வீட்டிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அந்த கிராமம், மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் இருக்கிறது.
கடந்த 18 வருடங்களில் சாரு தன் வாழ்க்கையின் 1,000 நாட்களை - மாதந்தோறும் ஐந்து நாட்கள் - நீரோ கழிவறையோ மின்சாரமோ படுக்கையோ காற்றாடியோ இல்லாத குடிசையில் கழித்திருக்கிறார். “உள்ளே இருட்டாக இருக்கும். இரவு நேரங்கள் பயம் கொடுக்கும். இருள் என்னை உண்டு விடுமோ என தோன்றும்,” என்கிறார் அவர். “என் வீட்டை நோக்கி ஓடி என் குழந்தைகளை நெஞ்சோடு கட்டிக் கொள்ள வேண்டுமென தோன்றும்… ஆனால் முடியாது.”


















