மலிவு விலை, விலைவாசி குறித்து உரையாடல் மாறும்போது, பெண்கள் தீவிரம் காட்டுகின்றனர். பாதுகாப்பான சமையல் எரிவாயுவுக்கான பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டரைப் பெற முடியவில்லை என்றும், ஆவணங்களில் சிக்கல் இருப்பதாகவும், 46 வயதான புஷ்பா ராவ்சாஹேப் பாட்டீல் கூறுகிறார்.
60 வயதை கடந்த உஷாபாய் ராம சுதருக்கு வீடு இல்லை. "லோகன்னா மூலபூத் சுவித மிலாயலா ஹவ்யேத், நாஹி [மக்களுக்கு அடிப்படை சேவைகள் கிடைக்க வேண்டும், இல்லையா]?" என்று பல ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்து சொந்த ஊருக்குத் திரும்பிய அப்பெண் கூறுகிறார். "அனைத்து குடிமக்களுக்கும் வாழ்வதற்கு வீடு இருக்க வேண்டும்."
பெரும்பாலான பெண்கள் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். 55 வயதாகும் ரசியா படேலின், வீட்டு வாடகை 3,500 ரூபாய் என்று கூறுகிறார். இது அவரது சொற்பமான மாத வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு. "ஒவ்வொரு தேர்தலிலும் மெஹங்காய் [பணவீக்கம்] குறித்த வாக்குறுதிகளை நாங்கள் கேட்கிறோம்," என்று அவர் கூறுகிறார். "தேர்தலுக்குப் பிறகு, எல்லாவற்றின் விலைகளும் உயர்ந்து கொண்டே இருக்கின்றன."
சுதந்திரமாக வாழ்வதற்காகவும், வேறு வாய்ப்பின்றியும் இந்த வேலையைச் செய்வதாக பெண்கள் கூறுகின்றனர். சுதர் 21 ஆண்டுகளாகவும், சங்கீதா நாராயண் ஷிண்டே 20 ஆண்டுகளாகவும், மாலுபாய் தேவிதாஸ் மகாலே 17 ஆண்டுகளாகவும், உஷா பீம்ராவ் தங்கர் 14 ஆண்டுகளாகவும் இங்கு பணியாற்றி வருகின்றனர். இன்னும் பலர் பல ஆண்டுகளாக இங்கு வேலை செய்கின்றனர்.
முதல் தொகுப்பாக 40 முதல் 50 கிலோ கத்திரிக்காயைத் தயாரிப்பதில் அவர்களின் நாள் தொடங்குகிறது. கத்தரிக்காயை வேகவைத்து, வறுத்து, உரித்து, சதைப்பற்றுள்ள உட்புறங்களை கவனமாக பிரித்தெடுத்து கையால் கூழ் செய்ய வேண்டும். கிலோ கணக்கில் பச்சை மிளகாயை எடுத்து பூண்டு, வேர்க்கடலை சேர்த்து கையால் இடிக்கின்றனர். இந்த தெச்சா (அரைத்த பச்சை மிளகாய் மற்றும் வேர்க்கடலை சேர்ந்த உலர்ந்த சட்னி), சூடான எண்ணெயுடன் நறுக்கிய கொத்தமல்லி, வெங்காயத்துடன் தாளித்து, சமைத்த கத்திரிக்காயில் சேர்க்கப்படும். பெண்கள் தினமும் சில டஜன் கிலோ வெங்காயத்தை நறுக்குகிறார்கள்.