“எல்லாவற்றையும் சீர்செய்ய ஒரு வழி கண்டுபிடிக்க முயற்சி செய்கிறேன்.”
சுனில்குமார் ஒரு தத்தேரா (பாத்திரம் செய்கிறவர்) ஆவார். “வேறு யாரும் சரி செய்ய முடியாதவற்றை மக்கள் என்னிடம் கொண்டு வருகிறார்கள். சில நேரங்களில் மெக்கானிக்குகள் கூட அவர்களின் கருவிகளை கொண்டு வருவார்கள்.”
செம்பு, வெண்கலம், பித்தளை போன்றவற்றைக் கொண்டு பலவகை சமையலறைப் பாத்திரங்களை செய்யும் நெடிய மரபில் வந்திருக்கிறார் சுனில்குமார். “கைகளில் அழுக்கு படிவது யாருக்கும் பிடிப்பதில்லை. அமிலம், நிலக்கரி, வெப்பம் ஆகியவற்றோடு நாள் முழுவதும் புழங்குகிறேன். எனக்கு மிகவும் பிடிப்பதால் இந்த வேலையை செய்கிறேன்,” என்று கூறும் அவருக்கு 40 வயது. கடந்த 25 ஆண்டுகளாக தத்தேரா கைவினைஞராக வேலை செய்கிறார் அவர்.
தத்தேரா (தாத்தியார் என்றும் அழைப்பதுண்டு) சமூகத்தவர், பஞ்சாபில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் வருகிறார்கள். இரும்பு தவிர்த்த பிற உலோகங்களையும் உருக்கி, உறுதியான கதவு கைப்பிடிகள், பூட்டுகள் போன்ற பல வடிவங்களில் வார்ப்பது இவர்களது மரபான தொழில். இந்த வேலையை இவர்கள் கைக்கருவிகளின் உதவியோடு செய்கிறார்கள். தனது தந்தை கேவல் கிரிஷன் (67 வயது) உடன் இணைந்து, ஓட்டை, உடைசல் பொருட்களை வாங்குகிறார் இவர். இவர்களது பாத்திரம் சீர் செய்யும் வேலையில் இவை பயன்படுகின்றன.
கடந்த சில பத்தாண்டுகளில் எஃகு போன்ற இரும்பு வகை பாத்திரங்களை பயன்படுத்துவது கூடிவிட்டதால், இந்த கைவினைஞர்களுக்கு வாழ்க்கை சவாலாகிவிட்டது. இன்று பெரும்பாலான சமையலறைக் கருவிகள் எஃகினால் செய்யப்படுகின்றன. வலுவான, விலை அதிகமான பித்தளை, செம்பு பொருட்களுக்கான தேவை சட்டென வீழ்ந்துவிட்டது.




















