65 வயது முனாவ்வர் கான், காவல்நிலையத்தை அடைந்தபோது மகனின் துயர்மிகு ஓலங்களை கேட்க முடிந்தது. 15 நிமிடங்கள் கழிந்து அச்சத்தம் அடங்கியது. இஸ்ரேல் கானின் தந்தையான அவர், காவலர்கள் மகனை அடிப்பதை நிறுத்தி விட்டனர் என நினைத்தார்.
அன்று காலை, ஒரு மதக்கூட்டத்தில் கலந்து கொண்டு போபாலை விட்டு கிளம்பியிருந்தார் இஸ்ரேல். 200 கிலோமீட்டர் தொலைவில் அவர் தினக்கூலியாக பணிபுரியும் கட்டுமானத் தளம் இருக்கும் குனாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அன்று மாலை (நவம்பர் 21, 2020) குனாவுக்கு திரும்பிய அவர், வீட்டுக்கு வரவில்லை. இரவு 8 மணிக்கு, வீட்டிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கோகுல் சிங் கா சக் குப்பத்தில் நான்கு காவலர்கள், இஸ்ரேல் வந்து கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தி அவரை அழைத்து சென்றனர்.
சிறையிலடைக்கப்பட்டபோது மாமியாரிடம் தொலைபேசியில் இஸ்ரேல் பேசினார் என்கிறார் 32 வயது அக்காவான பானோ. “அப்படித்தான் காவலர்கள் அவனை பிடித்து சென்ற விஷயம் எங்களுக்கு தெரிய வந்தது.”
அருகிலிருக்கும் குஷ்முடா காவல் நிலையத்துக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்குதான், காவலர்கள் அவரை தாக்கியதில் அவர் எழுப்பிக் கொண்டிருந்த ஓலங்களை முனாவ்வர் கேட்டார்.
காவலர்கள் அடிப்பதை நிறுத்தி விட்டதால், மகனின் சத்தம் அடங்கவில்லை என்பது 45 நிமிடங்கள் கழித்து முனாவ்வருக்கு தெரிய வந்தது. அவர் உயிர் பறிக்கப்பட்டிருந்தது. தலைக் காயத்தாலும் மாரடைப்பாலும் அவர் இறந்ததாக உடற்கூராய்வு தெரிவித்தது.
அந்த 30 வயது இஸ்லாமிய புலம்பெயர் தொழிலாளர், ஒரு சூதாடியை காப்பாற்ற முயன்று காவலர்களை எதிர்த்ததால், கைது செய்யப்பட்டதாக மத்தியப்பிரதேச காவல்துறை சொன்னதாக செய்திகள் வெளியாகின.
அவரின் குடும்பமோ அதை ஏற்கவில்லை. “இஸ்லாமியர் என்பதால்தான் அவர் கைது செய்யப்பட்டார்,” என்கிறார் இஸ்ரேலின் தாயான முன்னி பாய்.
காவல் நிலையத்தில் இஸ்ரேல் இறந்ததில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர் இறந்த விதத்தில் சந்தேகம் உண்டு.






