அந்தேரி ரயிலின் அமைதியான தன்மை, அதற்குள் நுழையும் பயணிகளில் சத்தங்களுக்கு முரணாக இருக்கிறது. கதவின் பிடி, கை என கைக்கு எது கிடைக்கிறதே அதைப் பிடித்து அவர்கள் ஏறுகின்றனர். ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு தடுமாறிக் கொண்டு காலி சீட்டுக்காக அலைந்து கொண்டிருக்கின்றனர். கேட்டுப் பார்க்கின்றனர். வாதிடுகின்றனர். சமயங்களில் ஏற்கனவே அமர்ந்திருப்பவர்களை தள்ளவும் செய்கின்றனர்.
பயணிகளில் 31 வயது கிஷன் ஜோகியும் நீல நிற ராஜஸ்தானி பாவாடை சட்டை அணிந்திருக்கும் 10 வயது பார்தியும் இருக்கின்றனர். மேற்கு நகர்ப்புற ரயில்களில் தந்தையும் மகளும் ஏறிய அந்த ஏழு மணி ரயில் அந்த மாலை நேரத்தில் அவர்கள் ஏறிய ஐந்தாவது ரயில்.
ரயில் வேகமெடுத்த சற்று நேரத்தில் பயணிகள் அவரவர் இடங்களை எடுத்துக் கொள்கின்றனர். கிஷனின் சாரங்கி இசை காற்றை நிறைக்கிறது.
“தேரி ஆங்கே ஃபூல் புலாயா.. பாதே ஹை ஃபூல் புலாயா…”
மூன்று கம்பிகள் மீது வில் வைத்து வாசிக்கப்படும் அக்கருவி மென்மையான செறிவான இசையை எழுப்புகிறது. கருவியின் மறுமுனையில் சிறு சத்த அறை, அவரது நெஞ்சுக்கும் இடது கைக்கும் இடையில் இருக்கிறது. அவர் வாசிக்கும் 2022ம் ஆண்டு பாலிவுட் படத்தின் பிரபலமான பாடலான ஃபூல் புலாயா இசை மெய்மறக்கச் செய்கிறது.
சில பயணிகள் வெறுமனே அமர்ந்திருப்பதற்கு பதிலாக, அருமையான இசையை கேட்க திரும்புகிறார்கள். சிலர் தங்களது செல்பேசிகளை எடுத்து அதை பதிவு செய்கிறார்கள். சிலர் புன்னகைக்கிறார்கள். பலர் மீண்டும் செல்பேசிகளுக்கு திரும்பி, காதில் ஹெட் செட்களை மாட்டிக் கொள்கின்றனர். ரயில்பெட்டிக்குள் நடந்து செல்லும் பார்தி அவர்களிடம் காசு வேண்டுகிறார்.










