சித்து கவடே பள்ளிக்கு செல்ல முடிவெடுத்தபோது, அவரின் பெற்றோர் 50 செம்மறிகளை மேய்க்கக் கொடுத்தனர். அவரின் குடும்பத்தினரிலும் நண்பர்களிலும் இருக்கும் பலரைப் போல, பாரம்பரியத் தொழிலான மேய்ச்சலை இளவயதிலிருந்தே தொடங்க வேண்டுமென அவரும் பணிக்கப்பட்டார். இறுதி வரை அவர் பள்ளிக்கு செல்லவே இல்லை.
கவடே, தங்கர் சமூகத்தை சேர்ந்தவர். ஆடு, செம்மறி மேய்க்கும் தங்கர் சமூகத்தினர் மகாராஷ்டிராவில் நாடோடி பழங்குடியாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். ஆறு மாதங்களுக்கும் மேலாக வீட்டை விட்டு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு அப்பால் விலங்குகளை மேய்க்க செல்வார்கள்.
வீட்டிலிருந்து நூறு கிலோமீட்டர்களுக்கு அப்பால் வட கர்நாடகாவின் கராடகா கிராமத்தில் செம்மறிகளை மேய்க்க சென்றிருந்தபோது, இன்னொரு மேய்ப்பர் நூல் கொண்டு வளையங்களாக பின்னிக் கொண்டிருப்பதை அவர் கண்டார். “அதை பார்க்க பரவசமாக இருந்தது.” அந்த மூத்த தங்கர் (மேய்ப்பர்) திறனுடன் எப்படி வெள்ளை நூல்களை கொண்டு ஒரு ஜலியை பின்னுகையில் அதன் நிறம் கடலையின் பழுப்பு நிறத்துக்கு மாறியது என நினைவுகூருகிறார்.
அந்த சந்திப்புதான் இளைஞராக இருந்த அவரை, அடுத்த 74 வருடங்களுக்கு செய்யப் போகும் கலையை கற்க வைத்தது.
கை கொண்டு பருத்தி நூல்களால் பின்னப்பட்டு, தோளில் தொங்கவிடப்படும் பைதான் ஜலி பை என குறிப்பிடப்படுகிறது. “கிட்டத்தட்ட எல்லா தங்கர்களும் தங்களின் நீண்ட பயணங்களில் ஜலி பையை கொண்டு செல்வார்கள்,” என்கிறார் சித்து. “”குறைந்த பட்சம் 10 ரொட்டிகளையும் ஒரு ஜோடி உடையையும் அதில் கொண்டு செல்ல முடியும். பல தங்கர்கள் அதில் வெற்றிலைப் பாக்கும் சுண்ணாம்பும் அதில் வைத்திருப்பார்கள்.”
ஜலிக்கென குறிப்பிட்ட அளவு இருந்தாலும், மேய்ப்பர்கள் அளவுகோல்கள் எதையும் பயன்படுத்துவதில்லை. “ஒரு சாண் மற்றும் நான்கு விரல்கள் உயரமாக இருக்க வேண்டும்,” என்கிறார் சித்து. அவர் செய்யும் ஒவ்வொரு ஜலியும் 10 வருடங்கள் தாங்கும். “மழையில் நனைந்துவிடக் கூடாது. மேலும் இதை கடித்து ஓட்டை போட எலிகளுக்கு பிடிக்குமென்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.”


















