"சுதந்திரம் என்பது பணக்காரர்கள் மற்றும் அதிகாரம் படைத்தவர்களுக்கானது" என்கிறார் சுந்தர் பகாரியா. குஜராத்தின் வதோதராவில் உள்ள மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் பிரதான கட்டிடத்திற்கு எதிரே உள்ள காலா கோடா சர்க்கிள் தெருக்களில் சுந்தர் மூன்று தசாப்தங்களாக சிறிய அளவிலான இந்திய கொடிகளை விற்பனை செய்து வருகிறார். "சில நாட்கள் அதிகமாக சாப்பிடுகிறோம், சில நாட்கள் குறைவாக சாப்பிடுகிறோம், பல நாட்கள் பசியுடன் தூங்குகிறோம்..." என்கிறார் அவர்.
அவரைப் போலவே, பகாரியா சமூகத்தைச் சேர்ந்த சுமார் 20 பேர் ஒவ்வொரு நாளும் அருகில் கடைகளை அமைத்து வருகின்றனர். காலை 9 மணியளவில் அவர்கள் வேலை நாளுக்குத் தயாராகத் தொடங்குகிறார்கள்: தரையில் ஒரு பிளாஸ்டிக் தாளில் வைக்கப்பட்டுள்ள ஸ்டைரோஃபோம் பெட்டிகளில் கொடிகளை சரிசெய்தல், நிமிர்ந்து வைக்கப்பட்ட ஸ்டைரோஃபோம் தாளில் மூவர்ண பேட்ஜ்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் கைப்பட்டைகளை பொருத்துதல் போன்ற வேலைகள். சில கொடிகள் தூண்களில் அல்லது நடைபாதையில் வைக்கப்பட்டுள்ளன. மற்றவை பிளாஸ்டிக் தாளில் மூவர்ண தொப்பிகளுடன் அடுக்கப்பட்டுள்ளன.
இரவு 11 மணிக்கு கடையை மூடிவிடும் அவர்கள் 14 மணி நேரத்தில் 200 ரூபாய் சம்பாதிக்கின்றனர். சிலர் ஃபதேஹ்கஞ்ச் மேம்பாலம், சயாஜிகஞ்ச் பகுதியில் உள்ள ரயில் நிலையம் அல்லது பிற பரபரப்பான சந்திப்புகளுக்கு வாடிக்கையாளர்களைத் தேடிச் செல்கின்றனர்.
கொடிகள், ராக்கிகள், மெழுகுவர்த்திகள், சாண்டா தொப்பிகள் என பருவகாலத்திற்கு ஏற்ப அனைவரும் பொருட்களை மாற்றுகிறார்கள்.
அவர்களில் 16 வயதான லக்ஷ்மி பகாரியா (மேலே முகப்புப் படத்தில் இருப்பவர்) தனது ஆறு வயதிலிருந்து கொடிகளை விற்பனை செய்து வருகிறார். ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தின் யூனியாரா தாலுகாவில் உள்ள ககோட் கிராமத்திலிருந்து உறவினர்களுடன் அவர் ஆண்டுக்கு மூன்று முறை இங்கு வருகிறார் - சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் கிறிஸ்துமஸ் சமயத்தில். "நகராட்சியில் இருந்து மக்கள் வந்து எங்களை வெளியேறச் சொல்கிறார்கள். ஆனால் நாங்கள் எப்படியோ சமாளித்து திரும்பி வருகிறோம்," என்று அவர் கூறுகிறார்









