அஞ்சலி, துளசியை எப்போதும் அம்மா என்றுதான் அழைத்து வருகிறார். இதை சொல்லும்போது அந்த தாய் பெருமையுடன் புன்னகைக்கிறார். அவரின் சுருள் முடிகள் கொண்டையாக போடப்பட்டிருக்கிறது. இளஞ்சிவப்பு நிறப் புடவை நேர்த்தியாக கட்டியிருக்கிறார். திருநங்கையான துளசி, ஒன்பது வயது மகளுக்கு தாய்.
பதின்வயதுகளின் பிற்பகுதியில்தான் துளசி, தன்னை ‘கார்த்திகா’ என குறிப்பிடத் தொடங்கினார். பிறகு, ஓர் அதிகாரி அவரின் ரேஷன் அட்டையில் தவறுதலாக ‘துளசி’ என்கிற பொது பாலின பெயரை எழுதி விட்டார். அவரும் அதை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டார். இரண்டு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் அவர் பதிலுறுகிறார்.
தமிழ்நாட்டின் திருப்போரூர் தாலுகாவிலுள்ள இருளர் குக்கிராமமான தர்காஸில், ஒரு சிறு குடிசையில் மகளுடன் துளசி வாழ்ந்து வருகிறார். அஞ்சலி கைக்குழந்தையாக இருக்கும்போதே, துளசியின் மனைவி அவரை பிரிந்து விட்டார். அஞ்சலியை அவர்தான் தனியாக வளர்க்கிறார். இருவருக்கும் பிறந்த முதல் குழந்தையை, ஒன்பது வயதில் 2016ம் ஆண்டு வர்தா புயலுக்கு பறிகொடுத்தனர்.
தற்போது நாற்பது வயதுகளில் இருக்கும் துளசி, ஒரு திருநங்கை குழுவில் பல வருடங்களாக உறுப்பினராக இருக்கிறார். மடியில் அமர்ந்திருக்கும் அஞ்சலியை அன்புடன் பார்த்தபடி, “இவளையும் நான் திருநங்கை கூட்டங்களுக்கு கையில் பால்புட்டி கொடுத்து அழைத்து செல்கிறேன்,” எனத் தொடர்கிறார்.


















