“இந்தா உனக்கான பரிசு,” என உள்ளூர் ‘பயனாளிகள் குழுவின்’ உறுப்பினராக இருக்கும் பெகாரி லக்ரா, கும்லா மாவட்டத்தின் தெத்ரா கிராமப் பஞ்சாயத்து தலைவர் தெரெசா லக்ராவிடம் சொல்கிறார். 5,000 ரூபாய் பணத்தை அவர் கைகளில் திணிக்கிறார். ‘பரிசு’ என்பது கையில் திணிக்கப்பட்ட 5,000 ரூபாய்தான் என்பது தெரெசாவுக்கு தெரியவில்லை. அவர் பணத்தை பெறவுமில்லை. ஏனெனில், அந்தக் கணத்தில் ராஞ்சியிலிருந்து வந்த ஊழல் ஒழிப்புத் துறை அதிகாரிகள் ஊர்த் தலைவரை சுற்றி வளைத்து, “சட்டவிரோத கையூட்டு” பெறுகிறாரென ஊழல் தடுப்பு சட்டத்தின்படி கைது செய்தார்கள்.
அச்சம்பவம் ஓரவோன் பழங்குடியான 48 வயது தெரெசாவை உடைத்துப் போட்டது. அவரின் பஞ்சாயத்து இடம்பெற்றிருக்கும் ஜார்கண்டின் பாசியா ஒன்றியத்தின் 80,000 பேருக்கும் கூட அதிர்ச்சி. 100 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ராஞ்சியிலிருந்து இந்த இடத்துக்கு - SUV காரில் வந்த எனக்கே இரண்டு மணி நேரத்துக்கு மேல் பிடிக்கும் தூரம் - 5,000 ரூபாய் லஞ்சம் வாங்குவதை தடுக்க லஞ்ச ஒழிப்பு துறை வந்ததில் உள்ள அபத்தத்தை யாரும் யோசித்ததாக தெரியவில்லை. எனினும் அவர் கொண்டு சென்று நிறுத்தப்பட்ட நீதிபதி இதைக் குறித்து குறிப்பிட்டார். லஞ்ச ஒழிப்பு துறை, இந்த இடத்துக்கு வந்து போக ஐந்து மணி நேரங்கள் ஆகியிருக்கும். அதற்கே அந்த தொகையில் பாதி செலவாகி இருக்கும். மிச்ச செலவுகளும் இருக்கிறது.
பாசியா ஒன்றியப் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு தெரெசா, சக பஞ்சாயத்து உறுப்பினர்களால் அழைத்து செல்லப்பட்டதும் கூட எவருக்கும் சந்தேகத்தைக் கொடுக்கவில்லை. அவர்கள்தான் அவருக்கு எதிராக சாட்சியாகவும் இருந்தவர்கள். மேலும் தெரெசாவை கைது செய்த குழு, அவரே சொல்வது போல, “என்னை பாசியா காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லவில்லை” - ஒன்றிய பஞ்சாயத்து அலுவலகத்துக்கு எதிரில்தான் இருக்கிறது. சம்பவம் நடந்த இடத்திலிருந்து சில மீட்டர்கள் தூரம்தான். அதற்கு பதிலாக, “10-15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கம்தாரா ஒன்றிய காவல் நிலையத்துக்கு என்னை கொண்டு சென்றனர்.”
ஜுன் 2017-ல் அது நடந்தது.
திரும்பிப் பார்க்கையில், 12ம் வகுப்பு படித்த அவருக்கு புரிகிறது, “இந்த பாசியா காவல் நிலையத்தில் அனைவருக்கும் என்னை தெரியும். நான் குற்றவாளி இல்லை என்பதும் அவர்களுக்கு தெரியும்,” என. அவரின் வழக்கு ராஞ்சில் இருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வந்தது.






