மே மாத தொடக்கத்தில் காஷ்மீரின் உயர மலைகளிலே மேய்ச்சல் நிலங்களைத் தேடி செம்மறிகள், ஆடுகள், குதிரைகள் மற்றும் நாய்கள் என் தன் 150 விலங்குகளுடன் ரஜோவரி மாவட்டத்தின் பெரி கிராமத்திலிருந்து கிளம்பினார் அப்துல் லத்தீஃப் பஜ்ரன். மகன் தாரிக் மற்றும் சிலருடன் சேர்ந்து சென்றார். “என் குடும்பத்தை (மனைவி மற்றும் மருமகள்) ஆகியோரையும் பலவீனமான விலங்குகளையும் உணவு, இருப்பிடம் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களையும் ஒரு மினி ட்ரக்கில் ஏற்றி அனுப்பினேன்,” என்கிறார் ஜம்முவை சேர்ந்த 65 வயது மேய்ப்பரான அவர்.
இரு வாரங்களுக்கு பிறகு, “அவர்களை (வயிலில்) பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தேன்,” என்கிறார் அவர். (இந்தோ பாகிஸ்தான் எல்லையின்) மினிமார்கை அடைந்து முகாம் அமைத்திருப்பார்கள் என அவர் எதிர்பார்த்திருந்தார்.
ஆனால் அவர்கள் அந்த இடத்திலிருந்து 15 நாட்கள் தொலைவில் இருந்தனர். வானிலையின் காரணமாக அவர்கள் நின்றுவிட்டதாக சொல்கிறார் அவர். மினிமார்குக்கு செல்லும் வழியில் இருக்கும் சொஜிலா கணவாயில் இருக்கும் பனி உருக அவர்கள் காத்திருந்தார்கள்.
ஒவ்வொரு வருடமும் ஜம்மு பகுதியில் கோடை வரும்போது, புற்களுக்கு பற்றாக்குறை ஏற்படும். பகர்வால் போன்ற மேய்ச்சல் நாடோடி சமூகங்கள், மேய்ச்சல் நிலங்கள் இருக்குமென்ற நம்பிக்கையில் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு இடம்பெயருவார்கள். அங்கு குளிர் தொடங்கும் அக்டோபர் மாதத்தில்தான் மீண்டும் அவர்கள் திரும்புவார்கள்.
ஆனால் உயர்மலைகளில் இருக்கும் மேய்ச்சல் நிலங்கள் இன்னும் பனியால் மூடப்பட்டிருக்கும் நிலையில், அப்துல் போன்ற மேய்ப்பர்கள் சிக்கலை எதிர்கொள்கின்றனர். மேய்ச்சல் நிலம் இல்லாத சொந்த கிராமத்துக்கு அவர்கள் திரும்பிச் செல்ல முடியாது. மேலே செல்லவும் முடியாது.











