“யார் ஜெயிக்கிறார் என்பது எப்படி ஒரு பொருட்டு ஆகும்? ஐபிஎல்லா உலகக் கோப்பையா என்பது கூட பொருட்டில்லை.”
கிரிக்கெட் மதம் போல பின்பற்றப்படும் நாட்டில், மதனின் கேள்வி ஆழமானதாக இருக்கிறது.
தொடர்ந்து அவர், “யார் ஜெயித்தாலும் எங்களுக்கு வேலை உண்டு,” என்கிறார். 51 வயது மதன் கிரிக்கெட் பந்துகள் செய்பவர். மீரட் நகரில் சிவப்பு மற்றும் வெள்ளை கிரிக்கெட் பந்துகள் தயாரிக்கும் பல ஆலைகளுக்கு உரிமையாளராக இருக்கிறார்.
அது மார்ச் மாதம். அவரை சுற்றி 100 அட்டைப் பெட்டிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் கிரிக்கெட்டில் விளையாடப்படத் தயாராக இருக்கும் ஆறு தோல் பந்துகள். ஐபிஎல் போட்டிகளின் முதல் பந்து மார்ச் மாதக் கடைசியில் வீசப்படும். அப்போட்டிகள் இரண்டு மாதங்கள் நடக்கும். அதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் போட்டிகள் தொடங்கும். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் உலகக் கோப்பை விளையாட்டு இந்தியாவில் நடக்கவிருக்கிறது.
“எந்த மட்டத்தில் பந்து பயன்படுத்தப்படும், யார் அதைக் கொண்டு விளையாடுவார், எத்தனை ஓவர்களுக்கு தாங்கும் போன்றவற்றை பந்தின் தரமே தீர்மானிக்கும்,” என்கிறார் மதன்.




















