சனிக்கிழமை மதியம் பெடானாவின் ராமலக்ஷ்மி நெசவாளர்கள் காலனிக்குள் நுழைந்தால் ‘டக் டக்’ என்று கைத்தறி சத்தத்தை தெளிவாக நீங்கள் கேட்க முடியும்.140க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த பகுதியை சுற்றி வாழ்ந்து வருகிறார்கள். அதுவும் இங்கு வாழும் பெரும்பாலான நெசவாளர்கள் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள். அதில் பலரும் நான் ஏதோ அவர்களின் 1000 ரூபாய் அரசு பென்ஷன் பணத்தை கொடுக்க வந்த அரசு அதிகாரி என்று தவறாக நினைத்து கொண்டனர். நான் ஒரு செய்தியாளர் என்று தெரிய வந்ததும் அவர்கள் கொஞ்சம் ஏமாந்துதான் போய்விட்டனர்.
”பெரும்பாலும் இந்தப் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் எல்லாரும் வாழ்வாதாரம் தேடி வேறு நகரத்திற்கு சென்று விட்டார்கள்,” என்று ஒற்றைக் கைத்தறியில் வேலை செய்துகொண்டே கூறுகிறார் 73 வயதான விடுமட்ல கோட்ட பைலய்யா. ஏன் எல்லா நெசவாளர்களும் வயதானவர்களாகவே இருக்கிறார்கள் என்று அவரிடம் கேட்டபோது , இளைஞர்கள் பலரும் இந்த மாவட்டத்தின் தலைநகரான பெடானா மற்றும் மச்சிலிபட்டணம் ஆகிய பகுதிகளுக்கு விவசாயம் மற்றும் கட்டிடத் தொழிலாளர்களாக சென்று விட்டார்கள் என பதிலளித்தார்.
பைலய்யாயின் முதியோர் ஓய்வூதியம் குறைவாக இருந்தாலும், அவரது மனைவியின் ஓய்வூதியத்தையும் சேர்த்து குடும்பத்தை ஓரளவுக்கு நடத்த முடிகிறது. நெசவுத் தொழிலின் மூலம் தினசரி கிடைக்கும் 100 ருபாய் இவரது குடும்பத்தை நடத்தப் போதுமானதாக இல்லை. “மூன்று நாட்களுக்கு 10 முதல் 12 மணி நேரம் வேலை செய்து ஒரு முழுப் புடவையை முடித்துக் கொடுத்தால் எனக்கு 300 முதல் 400 ரூபாய் வரை கிடைக்கும். அந்தப் புடவைகளை, பெடானாவில் உள்ள பெரிய நெசவாளர்களின் கடைகளுக்கு விற்று விடுவேன். அவர்கள் அதையே 600 முதல் 700 ரூபாய் வரை விலை வைத்து விற்பார்கள். இனிவரும் காலங்களில் நெசவுத்தொழில் செய்து மட்டுமே நாங்கள் பிழைக்க முடியாது” என்று கூறுகிறார் பைலய்யா.









