மாயா மொஹிதே பிறந்து மூன்று மாதமே ஆன ஷீத்தலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதே சமயம், குழந்தையின் தாய் பூஜா அவர்களின் கூடாரங்களில் அருகே ஓர் இடத்தில் வேலை செய்கிறார். சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் இரண்டு துணி மற்றும் தார்ச்சாலை கூடாரங்கள்தான் அவர்களின் ‘வீடுகள்’. பூங்காவில் ஓர் ஓடையில் இருந்து நிரப்பப்பட்ட தண்ணீரில் பாத்திரங்களை கழுவும் வெளிப்படுபாறையின் மேல் மாயா அமர்ந்திருக்கிறார். குழந்தை தனது தொட்டிலில் தூங்கிக்கொண்டிருக்கிறது - அது சிவப்பு போர்வையின் கீழுள்ள ஒரு பழைய பாலிதீன் சிமெண்ட் பை.
"இங்கே ஒரு கார் நிறுத்துமிடம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன" என்று மாயா கூறுகிறார். மும்பையின் போரிவலி கிழக்கு பூங்காவின் நுழைவாயிலில் வாகன நிறுத்தும் இடம் கட்டப்பட்டு வருகிறது. மாயா 2018 டிசம்பரில் தனது ஏழு குடும்பத்தினருடன் இந்த நகரத்திற்கு வந்தார்; அவர்களுள் பூஜா, அவரது நாத்தினார். அவர்களில் சிலர் மும்பையிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் கோபோலியில் உள்ள ஒரு கட்டுமான இடத்திலிருந்து இங்கு வந்திருக்கின்றனர். குடும்பத்தில் உள்ள ஒரு சிலர் ராஜஸ்தானிலுள்ள தளங்களில் வேலை முடித்த பிறகு போரிவலிக்கு வந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில்,மொஹியர்கள் ஜல்னா மாவட்டத்தின் ஜஃபெராபாத் தாலுகாவில் உள்ள தங்கள் கிராமமான ஹர்பலாவுக்குத் திரும்புவார்கள். இந்த குடும்பம் பெல்தார் சமூகத்தைச் சேர்ந்தது (சில மாநிலங்களில் நாடோடி பழங்குடியினராக பட்டியலிடப்பட்டுள்ளது). மாயாவின் பெற்றோரும் அவரது மூன்று சகோதரர்களும் ஹர்பலாவிலும் அதைச் சுற்றியுள்ள கட்டுமான தளங்களிலும் வேலை செய்கின்றனர். அல்லது, அவர்கள் விவசாயத் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். “நான் திருமணம் செய்துகொண்டப்போது மிகவும் இளமையாக இருந்தேன். அந்த நேரத்தில் நான் வயல்களில் வேலை செய்தேன்,”, என்று இப்போது 25 வயதாகும் மாயா கூறுகிறார்.
நீண்ட காலமாக, மாயாவின் மாமியார் குடும்பம் மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் பிற பகுதிகளிலும் கட்டுமான தளங்களில் பணியாற்றினர். "பின்னர் அவர்கள் கிராமத்தில் ஓர் ஏக்கர் நிலத்தை வாங்கி திரும்பிச் சென்றனர்", என்று அவரது மைத்துனர் முகேஷ் மொஹித் கூறுகிறார். சில ஆண்டுகளாக அவர்கள் விவசாயத் தொழிலாளர்களாக மட்டுமே வேலை செய்ய முயன்றனர், ஆனால் அந்த வேலைக்கான தினசரி ஊதியம் மாறாமல் சுமார் ரூ. 150-200 ஆக இருந்தது, அதனால் அவர்களின் குடும்பம் கட்டுமான தளங்களுக்குத் திரும்ப முடிவு செய்தது, அங்கு தினசரி ஊதியமாக ரூ. 400-500 அளிக்கின்றனர்”, என்கிறார் முகேஷ்.







