மக்கள் தொகைக் கணக்கெடுப்பாளர்கள் அமிதாப் பச்சனிடம், எப்போது சாதி குறித்து கேட்டாலும், அவரது பதில்: சாதி- இந்தியன், என்பதாகவே இருக்கும் என முன்புத் தெரிவித்திருந்தார். பாலிவுட் ஊடகங்கள் உணர்ச்சியை தூண்டும் விதத்தில், இதனை விட கொஞ்சம் கூடுதலாகவே இவ்வாறு மீண்டும் செய்யக்கூடும். ஆனால், ஷ்யாம் மகாராஜ் ஒன்றும் பச்சன் இல்லை, அவரது தம்பி சைதன்ய பிரபுவும் இல்லை. ஆனால், இவர்களும், இவர்களின் சகோதரத்துவ சிந்தனையின் மீது நம்பிக்கைக் கொண்டுள்ளவர்களும், இதை விட சிக்கலான பதில்களையும் கேள்விகளையும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பாளர்களிடம் எழுப்புகிறார்கள். “எங்களின் பதில்: நாங்கள் அஜாத்துகள். இதோ என் பள்ளிச் சான்றிதழ் அதனை நிருபிப்பதற்கானச் சான்று. ஆனால், நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதனையே எழுதிக் கொள்ளுங்கள்,” என மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் உள்ள மங்கருள்(தாஸ்தகிர்) கிராமத்தில் தனது வீட்டில் அமர்ந்தபடி பிரபு தெரிவித்தார்
அஜாத் என்றால் சாதியற்ற மனிதர்கள் என்று பொருள். அஜாத் 1920களில் செயல்பட்ட ஆற்றல்மிக்க சமூக இயக்கமாகும். 1930 களில் இந்த இயக்கம் உச்சத்தில் இருந்த சமயத்தில், தற்போதுள்ள மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பத்தாயிரக்கணக்கான ஆத்மார்த்தமான ஆதரவாளர்கள் இந்த இயக்கத்துக்கு இருந்தனர். இந்த இயக்கம் வண்ணமயமான சிந்தனையும் தனித்துவமான போக்குமுடைய சமூக சீர்திருத்தவாதி கணபதி மகாராஜ் என்றழைக்கப்பட்ட கணபதி பாபுத்கரால் வழிநடத்தப்பட்டது. சைதன்ய பிரபு மற்றும் ஷ்யாம் மகாராஜ் அவரது பேரன்கள் ஆவர். எப்போதும் மதுவிற்கு எதிராகவும், வன்முறைக்கு எதிராகவும் செயல்படுவதையே கொள்கையாகக் கொண்டுள்ள அமைப்புகளுக்கு பதிலாக, கணபதி மகாராஜ் பிற பிரச்சனைகளை எதிர்த்தார். முதன்மையாக சாதியை எதிர்த்தார். அவர் கூறியதை ஏற்று பலர் உருவ வழிபாட்டை நிறுத்தினர். அவர் பாலின சமத்துவத்திற்காகவும், ஏன் தனி உடைமைக்கு எதிராகவும் கூட உழைத்தார். 1930 ஆம் ஆண்டு இவரும், இவரது ஆதரவாளர்களும் தங்களை ‘அஜாத்’ என அழைத்துக் கொள்ளத் தொடங்கினர்.
அவரது சமபந்தி போஜன முன்னெடுப்புகள், அவர் பணிபுரிந்த கிராமங்களில் கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது. அவரது செயல்பாடுகள் குறித்து அவரது கொள்கையைப் பின்பற்றியவர்களில் ஒருவரான பி.எல்.நிம்கர்: “அவர், அவரை பின்தொடர்ந்த அனைத்து சாதியைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் இருந்தும் சமைத்த உணவை எடுத்து வர சொல்லுவார். இவை அனைத்தும் மொத்தமாக கலக்கப்பட்டு, அந்த உணவு பிரசாதமாக வழங்கப்படும்.” என்று கூறியுள்ளார். சாதி ஒழிப்பே அவரது மிகமுக்கிய இலக்காக இருந்துள்ளது. “சாதி மறுப்பு திருமணங்கள், கைம்பெண் திருமணம் ஆகியவற்றையும் முயன்று சாதித்தார்,” என்று கூறிய பிரபு, மேலும், “எங்கள் குடும்பத்திற்குள், எங்கள் தாத்தா முதல் நாங்கள் வரை, பார்ப்பனர்கள் முதல் தலித்துகள் வரை 11 வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்களை நாங்கள் மணந்துள்ளோம். எங்கள் கூட்டுக் குடும்பத்தில் இதுபோன்ற திருமணங்கள் பல நடந்துள்ளன.” எனக் குறிப்பிட்டார்.
கணபதி மகாராஜும் இவ்வாறே திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், “உயர் சாதி இந்துக்களுக்கு எதிராக, இங்கு தலித்துகளுக்கான கோவிலையும் திறந்து, ‘மானவ்’ (மனிதநேயம்) என்ற மதத்தையும் உருவாக்கினார்” என்றார் ஷ்யாம் மகாராஜ். “உயர் சாதி இந்துக்கள் அவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர். அப்போது இங்கிருந்த எல்லா வழக்கறிஞர்களும் பார்ப்பனர்கள். எனவே, யாரும் அவரது வழக்கை எடுக்கவில்லை.” என்றார்.






