அவரைப் பார்க்கும் போது, இப்போதுதான் டிக்கன்ஸ் நாவலில் இருந்து வெளிவந்தது போல் உள்ளார். காலி வீடுகள் வரிசையாக நிற்க, தனது வீட்டு திண்ணையில் அமர்ந்திருக்கும் 71 வயதான எஸ். கந்தசாமி, தான் பிறந்து வளர்ந்த கிராமத்தின் இலையுதிர் காலங்களை பகிர்ந்து கொள்கிறார். இவரது பார்வையில் படாமல் மீனாட்சிபுரத்தை யாராலும் கடந்து செல்ல முடியாது. 50 குடும்பங்கள் வாழ்ந்து வந்த கிராமத்தில் இப்போது இவர் மட்டுமே வாழ்ந்து வருகிறார். இவரது சொந்தக் குடும்பமும் கூட ஐந்து வருடங்களுக்கு முன் வெளியேறிவிட்டனர்.
இந்த பாழடைந்த கிராமத்தில் இவரது தனிமை, காதலையும் இழப்பையும் நம்பிக்கையையும் விரக்தியையும் தன்னகத்தே கொண்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் இங்கு வசித்தவர்கள் அனைவரும் மீனாட்சிபுரத்தை கைவிட்டுவிட்டனர். ஆனால், “இருபது வருடங்களுக்கு முன்பு தன்னுடைய மனைவி வீரலட்சுமி இறந்த இதே அறையில்தான் தன்னுடைய கடைசி காலத்தை கழிப்பேன்” என்பதில் உறுதியாக இருக்கிறார் கந்தசாமி. அவரது முடிவை உறவினர்களாலோ நண்பர்களாலோ மாற்ற முடியவில்லை.
“என்னுடைய குடும்பத்தினர் செல்வதற்கு முன்னரே மற்றவர்கள் அனைவரும் இங்கிருந்து சென்றுவிட்டதாக” அவர் கூறுகிறார். ஐந்து வருடங்களுக்கு முன்பு அவரது இரண்டாவது மகன் திருமணமாகி சென்றதும், தூத்துக்குடியிலுள்ள ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் இருக்கும் இந்தக் கிராமத்தில் வசிக்கும் ஒரே நபராகிப் போனார் கந்தசாமி. தண்ணீர் பற்றாக்குறை மிகுந்த இந்த மாவட்டத்திற்குள்ளேயே மிகுந்த பற்றாக்குறையுள்ள பகுதிகளில் ஒன்றாக மீனாட்சிபுரம் திகழ்கிறது.
“எந்தக் குடும்பமும் வெகு தூரம் சென்றிருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். 10 குடும்பங்கள் செக்காரக்குடி கிராமத்தில் வசிக்கிறார்கள்.” இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அந்தக் கிராமமும் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இதைவிட கொஞ்சம் நல்ல நிலைமையில் இருக்கிறது. ஆனால் எதையும் சமாளிக்க கூடிய, துடிப்பான கிராமமாக பார்க்க தோன்றுகிறது. செயல்பாடு மிகுந்த கிராமமாக இது இருக்க, அமைதியாக இருக்கிறது மீனாட்சிபுரம். வெறிச்சோடிய இந்தக் கிராமத்திற்குச் செல்லும் வழியை யாரிடமாவது கேட்டால், திகைப்படைவதை பர்க்கலாம். குறிப்பாக டீக்கடை உரிமையாளர் தடுமாறியபடி, “அங்கிருக்கும் கோயிலுக்கா நீங்கள் செல்கிறீர்கள்? அந்தக் கிராமத்தில் வேறெதுவும் இல்லை” என்றார்.








