“விக்னர் நஹி ஹேண்ட்லூம். ஆயுஷ்ய காத்லே தியாச்சவர் [நான் என்னுடைய கைத்தறியை விற்க மாட்டேன். எனது மொத்த வாழ்க்கையும் அந்த கைத்தறியில்தான் கழிந்தது)” என்கிறார் வசந்த் தம்பே. அவரது வீட்டின் மையத்தில் ஏழு அடி உயரத்தில் இருக்கும் ஒரு தறியை சுட்டிக்காட்டுகிறார். "இதைப் பயன்படுத்தி நீங்கள் எந்த வகையான துணியையும் நெய்யலாம்" என்று அவர் பெருமையுடன் கூறுகிறார்.
சாக்வான் மரத்தில் தயாரிக்கப்பட்டிருக்கிற இந்தத் தறியில் தம்பே ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் 66 மீட்டர் துணியை நெய்கிறார். சராசரியாக ஒரு மாதத்திற்கு 130 மீட்டர்கள் நூல் பயன்படுத்துகிறார். இந்த நூல்தான் உயர் தர சட்டைகளாக தைக்கப்படுகிறது. அவர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக, பல்வேறு தறிகளில் இதைச் செய்து வருகிறார். 1 லட்சம் மீட்டர்களுக்கும் மேலான அளவுள்ள துணியை இதுவரையும் அவர் நெய்திருக்கிறார்.
அந்த ஒரு லட்சம் மீட்டர்கள் என்பது 18 வயதில் அவர் ஒன்பது கெஜம் சேலையை நெய்தபோது தொடங்கியது. இப்போது அவருக்கு 82 வயதாகிறது. ரெண்டல் கிராமத்தில் உள்ள ஒரு பணியிடத்தில் கைத்தறியில் பயிற்சி பெறுபவராக முதலில் தம்பே சேர்ந்தார். சேலை தயாரிப்பது எப்படி என்று அங்கு கற்றுக்கொண்டார். "ஒரு மாதம் நாங்கள் அங்கே எந்த சம்பளமும் இல்லாமல் வேலை செய்ய வேண்டியிருந்தது," என்று அவர் நினைவு கூர்ந்தார்.
நான்கு மணி நேரத்தில் ஒரு ஒன்பது கெஜம் சேலையை (ஒரு கெஜம் என்பது எட்டு மீட்டர்களை விட கொஞ்சம் அதிகம்) நெசவு செய்ய தம்பே வேகமாக கற்றுக்கொண்டார். ஒவ்வொரு சேலைக்கும் 1.25 ரூபாய் அவருக்குக் கிடைக்கும். "அதிகபட்சம் எத்தனை சேலைகளை நெய்ய முடியும் என்று நாங்கள் போட்டியிடுவோம். ஒரு வாரத்தில் 21 புடவைகள் வரை நெய்திருக்கிறோம் ” என்று அவர் நினைவு கூர்ந்தார். 1960 கள் மற்றும் 70 களில், அவருக்கும் அவரது சக ஊழியர்களுக்கும் அத்தகைய சாதனைக்கு 2 ரூபாய் போனசாக கிடைக்கும்.
வசந்த் குடும்பத்தில் வேறு யாரும் நெசவாளர் இல்லை. அதனால் அவருக்கு அந்தப் பயிற்சி அவசியமாக இருந்தது. அவரது குடும்பம் நாடோடி பழங்குடி இனமாக பட்டியலிடப்பட்ட தங்கர் சமூகத்தைச் சேர்ந்தது. வசந்தின் தந்தை சங்கர் தம்பே கொத்தனாராகப் பணிபுரிந்தார். அவரது தாயார் சோனா பாய் ஒரு விவசாயத் தொழிலாளியாகவும் இல்லத்தரசியாகவும் இருந்தார். நீங்கள் ஏன் உங்கள் அப்பாவைப் போல ஒரு கொத்தனாராக மாறவில்லை என்று கேட்டால், "வீடுகளின் உச்சியிலிருந்து விழுந்துவிடுவேனோ என்று நான் பயந்தேன் " என்கிறார் வசந்த். "அதனால் வேறு வேலை செய்ய முடிவு செய்தேன்." என்கிறார் அவர்.










