கராபுரி வீட்டிலிருந்து காட்டுக்குள் விறகு சேகரிக்க சென்றபோது ஏதோவொன்று ஜெயஸ்ரீ மாத்ரேவை கடித்துவிட்டது. இரு குழந்தைகளுக்கு தாயும் 43 வயது நிறைந்தவருமான அவர் கடியைப் பொருட்படுத்தவில்லை. ஏதோ ஒரு சுள்ளி குத்தியதாகவும் நினைத்திருக்கலாம். ஜனவரி 2020ம் ஆண்டின் குளிர்கால பிற்பகலில் அவர் சேகரித்த விறகுகளைத் தூக்கிக் கொண்டு சீக்கிரமாகவே வீட்டுக்குக் கிளம்பி விட்டார்.
சற்று நேரம் கழித்து ஒரு உறவினருடன் வாசலருகே பேசிக் கொண்டிருந்தபோது அவர் மயங்கித் தரையில் விழுந்தார். தொடக்கத்தில் அங்கிருப்பவர்கள் அவர் கொண்டிருந்த விரதம் கொடுத்த பலவீனத்தால் மயக்கமடைந்ததாக நினைத்தனர்.
”அவர் மயங்கி விட்டார் என எனக்குச் சொல்லப்பட்டது,” என ஜெயஸ்ரீயின் மூத்த மகளான 20 வயது பாவிகா நினைவுகூருகிறார். அவரோ அவரது தங்கையான 14 வயது கவுரியோ ஓர் உறவினர் வீட்டில் இருந்ததால் சம்பவத்தை நேரடியாக பார்க்கவில்லை. சம்பவத்தை நேரில் கண்ட உறவினரும் அண்டைவீட்டாரும்தான் அவர்களுக்குத் தகவல் கொடுத்தனர். சற்று நேரம் கழித்து ஜெயஸ்ரீ நினைவுமீண்டபோது அவரின் கைகள் நடுங்கிக் கொண்டிருந்ததாகவும் அவர்கள் சொன்னார்கள். “என்ன நடந்தது என யாருக்கும் தெரியவில்லை,” என்கிறார் பாவிகா.
ஜெயஸ்ரீயின் கணவரான 53 வயது மதுகர் மாத்ரேவுக்கு தகவல் கொடுக்க ஒருவர், அவர் உணவுக்கடை நடத்திக் கொண்டிருக்கும் கராபுரித் தீவுக்கு விரைந்தார். அரபிக் கடலில் இருக்கும் அத்தீவு எலிஃபெண்டா குகைகளுக்கு பெயர் பெற்றது. மும்பை நகரத்தின் அருகே அமைந்திருக்கும் சுற்றுலாத் தளம் யுனெஸ்காவின் சர்வதேச பாரம்பரிய தள அங்கீகாரத்தை பெற்றது. இங்கிருக்கும் கல் கட்டுமானம் 6லிருந்து 8ம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்தவை. ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். தீவில் வசிப்பவர்களின் வருமானம் சுற்றுலாவைச் சார்ந்துதான் இருக்கிறது. தொப்பிகள், கண்ணாடிகள், நினைவுப் பொருட்கள், உணவுகள் போன்றவற்றை விற்பார்கள். அங்கு வசிக்கும் சிலர் குகைகளை சுற்றிக் காட்டும் வேலையைச் செய்து வருமானம் ஈட்டுகின்றனர்.
சுற்றுலா வரைபடத்தில் தளம் இடம்பெற்றாலும் கராபுரியின் தீவிலுள்ள கிராமத்தில் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லை. ஒரு சுகாதார மையம் கூட கிடையாது. இரண்டு வருடங்களுக்கு முன் ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் யாரும் வருவதில்லை. மொத்த மக்கள்தொகையான 1,100 பேர் ராஜ்பந்தர், ஷெத்பந்தர் மற்றும் மொராபந்தர் ஆகிய மூன்று குக்கிராமங்களில் வசிக்கின்றனர். சுகாதார வசதியின்மை, படகில் சென்று தங்களுக்கான வழிகளை தேடும் நிலையில் வைத்திருக்கிறது. இதில் செலவு அதிகமாக இருப்பது மட்டுமின்றி, மருத்துவம் பெறுவதில் தாமதமும் ஏற்படுகிறது. சில நேரங்களில் அது மரணத்திலும் முடிகிறது.














