திறந்தவெளிக் கழிப்பிடங்கள்தான் உள்ளன. குறிப்பாக வெள்ளத்துக்குப் பிறகு ஒவ்வொரு வீட்டிலும் வயிற்றுப்போக்கு இயல்பான ஒன்றாக உள்ளது. குடிநீருக்கு 10 குடும்பங்கள் ஒரு குழாய் மூலம் எடுக்கப்படும் கிணற்று நீரை சார்ந்து உள்ளன. அதையும் அவர்களது சொந்த செலவில்தான் பராமரித்து வருகின்றனர்.
"எங்களுடைய நதித் தீவு தென்கரையில் போகோ மற்றும் வடகரையில் செங்கா என இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளாக சரிசமமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சில அதிகாரிகளின் முரண்பாடுகள் காரணமாக, செங்கா தொகுதியில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்குக் கொடுக்கப்படும் ரேஷன் பொருள்கள் நீண்டகாலமாக வழங்கப்படுவதில்லை" என்றார் அலி. போகோ தொகுதியில் இருக்கிறார் அலி. அவருக்கு அரிசி தவிர்த்து வேறு எந்தப் பலன்களும் கிடைக்கவில்லை.
மின்சாரம் என்பது இவர்களுக்கு வெகுதூரக் கனவு. எந்தவொரு குடும்பத்திடமும் சூரிய விளக்கு இல்லை. இதற்குப் பதிலாக அவர்கள் மண்ணெண்ணையையே சார்ந்துள்ளனர். இதன் விலை ஒரு லிட்டர் ரூ. 35. அலியின் குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு 5 முதல் 7 லிட்டர் வரை தேவைப்படுகிறது. வானொலியே இங்கு ஆடம்பரப் பொருளாகத்தான் உள்ளது.
"நதித் தீவு குறைந்தபட்சம் 20 வருடங்களுக்குத் தாக்குப்பிடித்தால், வாழ்க்கை கொஞ்சம் நன்றாக இருக்கும். ஆனால், நதித் தீவின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள்தான். ஒப்பீட்டளவில் நிலையான வாழ்க்கைக்குத் தேவையான ஏதேனும் சம்பாதிக்கும் நேரத்தினுள் மீண்டும் மண் அரிப்பு வந்துவிடும். நாங்கள் இடம்பெயரும் நிலைக்குத் தள்ளப்படுவோம்" என்றார் அலி.
"இதுதான் எங்கள் கதை. நதித் தீவில் உள்ள அனைவரது கதையும் இதுதான். இருந்தாலும், எனது கதை இத்துடன் முடிந்துவிடாது" என்றார் அலி. இதைத் தொடர்ந்து, தனது இரண்டாவது மகன் குறித்துப் பேசத் தொடங்குகிறார் அலி. அவருக்கு 18 வயது. 12-ம் வகுப்பு அறிவியல் மாணவரான அவர் பார்பேடா மாவட்டத்திலுள்ள கல்லூரியில் படிக்கிறார் . மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக அவர் தயாராகி வருகிறார். அலியால், மூத்த மகனுக்கு உயர்கல்வியை வழங்க முடியவில்லை. ஆனால், ஆசிரியர்களின் உதவியால் அவரது இரண்டாவது மகன் அனைத்துக் கஷ்டங்களுக்கும் மத்தியில் மேல்நிலைத் தேர்வில் 83 சதவிகிதம் மதிப்பெண் பெற்றார்.
"மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு அவர் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்" என்றார் அலி. மேலும், "அவரது ஆசிரியர்கள் படிப்பை முடிப்பதற்கு ரூ. 30 லட்சம் செலவாகும் என்றனர். நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அவர் எப்படி படிப்பை முடிக்கப் போகிறார் என்று எனக்குத் தெரியவில்லை" என்றார் அவர்.
ஆனால், வாழ்க்கை ஒருநாள் புதிய திருப்பத்தை அடையும் என்ற நம்பிக்கையில் இருப்பதை அவரது கண்கள் கூறுகின்றன.
தமிழில்: அன்பில் ராம்