விமல் தாக்ரே, வாங்கனி நகரில், தனது இரண்டு அறை உள்ள வீட்டின் சிறிய குளியல் அறையில், துணிகளை துவைத்துக்கொண்டிந்தார். புடவைகள், சட்டைகள் மற்றும் மற்ற துணிகளுக்கு பச்சை நிற குவளையில் இருந்த தண்ணீரை ஊற்றி, தனது பலவீனமான கைகளால், சோப்பு போட்டுக்கொண்டிருந்தார்.
பின்னர் துவைத்து, அலசிய ஒவ்வொரு துணியையும் தனது மூக்கிற்கு அருகில் வைத்து பலமுறை முகர்ந்து பார்த்து, அவை நன்றாக சுத்தமாகிவிட்டதா என்று சோதித்துக்கொண்டிருந்தார். பின்னர், சரியான பாதையில் செல்கிறோமா என்பதற்காக, அருகில் இருந்த சுவரை பிடித்து, தொடக்கத்தில் தடுமாறி, கதவை தொட்டுக்கொண்டே, குளியலறையில் இருந்து வெளியே வருகிறார். என்னிடம் பேசுவற்காக அந்த அறையில் உள்ள படுக்கையில் அமர்ந்தார்.
“நாங்கள் தொடுவதன் மூலமே எங்கள் உலகை காண்கிறோம். தொடுவதன் மூலமே எங்கள் சுற்றத்தை உணர்கிறோம்” என்கிறார் 62 வயதான விமல். அவரும், அவரது கணவர் நரேசும் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள். அவர்கள் மும்பை வடக்கு ரயில் நிலையத்தில் சர்ச்கேட் முதல் போரிவளி வரை கைக்குட்டை விற்பவர்கள். கோவிட் – 19 தேசியளவிலான ஊரடங்கையொட்டி, நகரின் உள்ளூர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதையடுத்து, மார்ச் 25ம் தேதி முதல் அந்த வேலையும் தடைபட்டுவிட்டது.
மூம்பையின் உள்ளூர் கூட்ட நெரிசலில், சிக்கி, போராடி இருவரும் நாளொன்றுக்கு ரூ.250 வரை சம்பாதித்துவிடுவார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஓய்வெடுப்பதற்காக பணிக்கு செல்ல மாட்டார்கள். தெற்கு மும்பையில் உள்ள மஸ்ஜித் பண்டரில் உள்ள மொத்த விற்பனை சந்தையில் கைக்குட்டைகளை வாங்குவார்கள். அதுபோல் ஒவ்வொரு முறையும் ஆயிரம் கைக்குட்டைகள் வாங்குவார்கள். ஊரடங்கிற்கு முன்னால், தினமும், 20 முதல் 25 கைக்குட்டைகள் வரை ஒன்று ரூ.10க்கு விற்பனை செய்துவந்தார்கள்.
அவர்களுடன் வசிக்கும், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள, அவர்களின் 31 வயது மகன் சாகர், ஒரு ஆன்லைன் நிறுவனத்தின் கிடங்கில், ஊரடங்கு துவங்குவதற்கு முன்பு வரை வேலை செய்து வந்தார். அவரும், வீட்டு வேலை செய்யும், அவரது மனைவி மஞ்சுவும் சேர்ந்து ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை குடும்பத்தின் மாத வருமானத்திற்கு பங்களித்து வந்தனர். அவர்களின் 3 வயது மகள் சாக்ஷியுடன் தாக்ரே குடும்பத்தின் 5 நபர்களும், இரண்டு அறைகள் கொண்ட ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தனர். தற்போது, வீட்டு வாடகை ரூ.3 ஆயிரத்துடன், மளிகை, மருந்துப்பொருட்கள், அவ்வப்போது ஏற்படும் மருத்துவ செலவுகளை சமாளிப்பது மிகக்கடினமாக உள்ளதாக நரேஷ் கூறுகிறார்.









