விற்கள் செய்து ஷெரிங் டோர்ஜீ புடியா வருமானம் ஈட்டவில்லை என உணர நேரம் எடுத்துக் கொள்கிறார். ஏனெனில் வில் செய்யும் கலையில் அந்தளவுக்கு அவரது வாழ்க்கை ஒன்றிப் போயிருக்கிறது. கர்தோக் கிராமத்திலுள்ள வீட்டில் 83 வயது ஷெரிங் பேசிய எல்லாமும் அதைப் பற்றித்தான். 60 வருடங்களாக அவரது வருமானம், மரச்சாமான்களை சரி செய்வது போன்ற தச்சு வேலையில் இருந்துதான் வருகிறது. ஆனால் வில் வித்தை மீது அவர் கொண்ட ஈர்ப்பு, சிக்கிம் கலாச்சாரத்தில் ஆழமாக வேர் கொண்டுள்ளது.
மரத் தச்சராக அவரின் பலகால அனுபவம் அவருக்குப் பெரிய விஷயமில்லை. பாக்யோங் மாவட்டத்தின் வில் தயாரிப்பவர் என்றே அவர் அறியப்பட விரும்புகிறார்.
“10, 12 வயது இருக்கும்போதே நான் மரக்கட்டைகளை கொண்டு பொருட்கள் உருவாக்கத் தொடங்கிவிட்டேன். படிப்படியாக அவை விற்களின் உருவம் எடுக்கத் தொடங்கின. மக்களும் அவற்றை வாங்கத் துவங்கினர். அப்படித்தான் இந்த வில்லுக்காரன் பிறந்தான்,” என்கிறார் ஷெரிங்.
“முன்பெல்லாம் வில் வேறு விதத்தில் செய்யப்பட்டது,” என்கிறார் அவர், அவரின் சிலப் பொருட்களைக் காண்பித்து. “இந்த பழைய ரகத்துக்கு பெயர் தப்ஜூ (நேபாள மொழியில்). இரண்டு சாதாரண குச்சிகள் ஒன்றாக்கப்பட்டு, கட்டப்பட்டு, தோலால் மூடப்பட்டது. இந்த காலத்தில் நாம் செய்யும் ரகத்துக்குப் பெயர் ‘படகு வடிவம்’. ஒரு வில் செய்யக் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் ஆகும். அதுவும் சுறுசுறுப்பான இளமையான கை செய்தால்தான். முதிய கை இன்னும் சில நாட்கள் அதிகமாக எடுத்துக் கொள்ளும்,” என்கிறார் ஷெரின் குறும்புப் புன்னகையுடன்.














