“விடுமுறைகள், இடைவேளைகள் அல்லது முறையான வேலை நேரம் எதுவும் கிடையாது.”
ஷைக் சலாவுதீன், ஹைதராபாத்தின் ஒரு கேப் டாக்ஸி நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிகிறார். 37 வயது பட்டதாரியான அவர், நிறுவனத்துடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை படிக்கவே இல்லை. “அதில் சட்ட நுணுக்க வார்த்தைகள் நிறைய இருந்தன.” ஒப்பந்தமும் அவர் தரவிறக்கம் செய்த செயலியில்தான் இருக்கிறது. கைவசம் இல்லை.
“ஒப்பந்தம் எதிலும் கையெழுத்திடவில்லை,” என்கிறார் டெலிவரி ஏஜெண்ட் ரமேஷ் தாஸ் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). கொல்கத்தாவுக்கு இடம்பெயர்ந்திருக்கும் அவர், சட்டப்பூர்வ உத்திரவாதம் எதையும் எதிர்பார்க்கவில்லை. மேற்கு வங்க பஸ்சிம் மெதினிபூர் மாவட்ட பகா ருனா கிராமத்திலிருந்து வந்துவிட்ட பிறகு சீக்கிரம் வேலை கிடைக்க வேண்டும் என்பதே அவரின் தேவையாக இருந்தது. “எந்த ஆவணங்களும் கொடுக்கப்படவில்லை. எங்களின் அடையாள அட்டை செயலியில் இணைக்கப்பட்டது. அது மட்டும்தான் ஒரே அடையாளம். நாங்கள் ஒப்பந்ததாரர்கள் (மூன்றாம் நபர்களின்) வழியாக வேலையில் சேர்க்கப்பட்டோம்,” என சுட்டிக் காட்டுகிறார்.
ஒரு பார்சலுக்கு 12லிருந்து 14 ரூபாய் வரை ரமேஷுக்கு கமிஷன் வரும். 40லிருந்து 45 பார்சல்களை ஒருநாளில் எடுத்து சென்று உரியவர்களிடம் கொடுத்தால் 600 ரூபாய் அவர் சம்பாதிக்க முடியும். ஆனால் அதில், “எரிபொருள் செலவு இல்லை. காப்பீடு இல்லை. மருத்துவ பலன் இல்லை, எந்த சலுகைத் தொகையும் இல்லை,” என்கிறார் அவர்.















