“தினமும் நான் ஒன்றரை கிலோமீட்டர் நடந்து கிராமத்திற்கு வெளியே சென்று தண்ணீரைக் கொண்டு வருகிறேன். ஒரு நாளுக்கு நான்கு முறை இதைச் செய்கிறேன். எங்கள் கிராமத்தில் தண்ணீர் கிடையாது. கோடைக்காலம் இன்னும் கடினமானது. கிணற்றில் நீரின் அளவும் சரிந்து வருகிறது...” என்கிறார் கடந்த ஆண்டைப் போன்று இந்த வாரம் நடைபெற இருந்த நாஷிக்-மும்பை விவசாயிகள் பேரணியில் பங்கேற்க வந்த பீமாபாய் டாம்பலே.
“மழையின்மையால் கடந்தாண்டு எனது நெற்பயிர்களை இழந்தேன். ஆண்டுதோறும் எங்கள் ஐந்து ஏக்கர் நிலத்தில் 8-10 குவிண்டால் நெல் கிடைக்கும. இந்த பருவத்தில் இரண்டு குவிண்டால்கூட கிடைக்கவில்லை. நிலம் எங்கள் பெயரில் இல்லை என்பதால் நஷ்டத்திற்கு இழப்பீடு கூட கிடையாது. அது வனத்துறைக்குச் சொந்தமானது,” என்கிறார் நாஷிக் மாவட்டம் பீன்ட் தாலுக்காவில் உள்ள நிர்குடி கரஞ்சலி கிராமத்தில் வசிக்கும் 62 வயது பீமாபாய்.
நெல் அறுவடைக்குப் பிறகு பீமாபாய் கேழ்வரகு, உளுந்து, துவரை போன்றவற்றை பயிரிடுவார். இந்த பட்டத்தில் அனைத்தும் நின்றுவிட்டது. எனவே பீமாபாய் அன்றாடம் 30-40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டியோலாலி, சோன்கிரி கிராமங்களுக்குச் சென்று திராட்சை, தக்காளி, வெங்காயம் பறிப்பது போன்ற வேலைகளைச் செய்ய தொடங்கிவிட்டார். “நான் தினமும் ரூ.150 ஈட்டுகிறேன், ஷேர் ஆட்டோவில் வருவதற்கு ரூ.40 செலவிடுகிறேன். நான் அன்றாடம் சம்பாதித்து, அன்றாடம் செலவு செய்கிறேன்,” என்று அவர் பெருமூச்சு விடுகிறார்.




