"ஏழு மாதங்கள் ஆகிவிட்டன. எனவே, நான் பழங்களையும் பாலையும் நன்றாக எடுத்துக்கொள்ள வேண்டுமென மருத்துவர் சொல்கிறார். என்னால் அவற்றை எப்படி வாங்கமுடியும், சொல்லுங்கள். ஆற்றுப் பக்கம் போக அனுமதித்தால், நான் ஒரு படகை ஓட்டி என் குழந்தைகளும் நானும் அதன் மூலம் பிழைக்கமுடியும்." என்கிறார், சுஷ்மா தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அடிகுழாயில் தண்ணீருக்காகக் காத்திருக்கும்போது நம்மிடம் இவ்வாறு கூறிய அவர், இப்போது ஏழு மாத கர்ப்பிணி; இணையரை இழந்தவரும்கூட.
படகு சவாரியா? 27 வயதான சுஷ்மா தேவி, நிசாத் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த சாதியைச் சேர்ந்த ஆண்கள் பெரும்பாலும் படகுக்காரர்களாக உள்ளனர். மத்தியப்பிரதேச மாநிலம், சத்னா மாவட்டத்தில், மஜ்கவன் வட்டாரத்தில் உள்ள கேவத்ரா எனும் சிற்றூரில், இந்த சமூகத்தைச் சேர்ந்த 135 பேர் வாழ்ந்துவருகின்றனர். சுஷ்மாவின் இணையரான 40வயது விஜய்குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஐந்து மாதங்களுக்கு முன்னர் ஒரு விபத்தில் இறந்துவிட்டார். அப்போது, இவர்களுக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகியிருந்தன. சுஷ்மா, ஒருமுறைகூட படகை ஓட்டும் பயிற்சி பெற்றிருக்கவில்லை. ஆனால், விஜயுடன் பல முறை படகில் சவாரிசெய்த அனுபவத்தை வைத்து, தன்னால் படகோட்ட முடியுமென அவர் நம்புகிறார்.
பொதுமுடக்கத்தின்போது, மந்தாகினி ஆற்றின் இந்த நெடுக்கில் ஒரு படகும் ஓடவில்லை. மத்தியப்பிரதேசத்துக்கும் உத்தரப்பிரதேசத்துக்கும் இடையில் உள்ள சித்திரகூட் பகுதியை பிரிக்கும்வகையில் இந்த ஆறு ஓடுவது குறிப்பிடத்தக்கது.
சூரியன் மறைந்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகு கேவத்ராவுக்குச் செல்லும் பாதையில் முதல் தெருவிளக்கை எரிவதைப் பார்த்தோம். தன் சிறு பிள்ளையுடன் தண்ணீர் எடுத்துச்செல்வதற்காக ஒரு பிளாஸ்டிக் வாளியோடு அடிகுழாய்க்கு வந்தார், சுஷ்மா. அங்குதான் நாங்கள் அவரைச் சந்தித்தோம்.
மந்தாகினி ஆற்றில் படகோட்டுவதன் மூலம் நிசாத்துகள் தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டுகிறார்கள். சித்திரகூட் ஆனது, ஒரு புகழ்பெற்ற புனித யாத்திரை மையம் ஆகும். தீபாவளி சமயத்தில் இலட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருவார்கள். மந்தாகினி ஆற்றின் கரையில், கேவத்ராவிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் நிசாத்துகளின் படகுகள் நிறுத்தப்பட்டிருக்கும். தெய்வீக உலா வரும் பக்தர்களை நிசாத் படகுக்காரர்கள், பாரத் காட், கோயங்கா காட் ஆகிய தலங்களுக்கு அழைத்துச்செல்வார்கள்.
நிசாத்துகள் ஆண்டில் அதிக வருமானம் பார்ப்பது அப்போதுதான். அதாவது, அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 600 ரூபாய் கிடைக்கும். திருவிழா அல்லாத காலகட்டத்தில் அவர்கள் ஈட்டுவதைவிட 2-3 மடங்கு தொகை, இது.






