இந்தாண்டு வெயில் சுட்டெரிக்கும் ஒரு நாளில், தனது ஐந்து ஏக்கர் நிலத்தில் பயிரிட்ட எட்டு குவிண்டால் மிளகாயை விற்கும் நம்பிக்கையுடன் நுசண்டிலா மண்டலம் திரிபுராபுரம் கிராமத்திலிருந்து லாரியில் 105 கிலோமீட்டர் பயணித்து குண்டூருக்கு வந்தார் கோத்தம் ஹனிமி ரெட்டி. இதுவே அவரது கடைசி அறுவடை. ஏப்ரல் மாதத்தில் மூன்று முறை சந்தைக்கு வந்து குவிண்டாலுக்கு முறையே ரூ. 6000 முதல் ரூ.8000 வரை என மிர்ச்சி LCA334 மற்றும் குண்டூர் சன்னம் மிளகாயை அவர் விற்றார்.
இப்போது அவர் விலை ஏறினால் சரக்கை விற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் நகரில் உள்ள என்டிஆர் வேளாண் சந்தை குழுவிற்கு மீண்டும் வந்து மூன்று நாட்களாக காத்திருந்தார். 2017-18ஆம் ஆண்டிற்கான வேளாண் பருவம் முடியும் நாளில் மண்டியின் உணவகத்திற்கு வெளியே அமர்ந்திருந்ததாக அவர் தெரிவித்தார். “இன்று விலை மேலும் சரிந்துவிட்டது. ஒரு குவிண்டாலுக்கு 4,200 ரூபாய் மட்டுமே தர முடியும் என்கின்றனர் கமிஷன் முகவர்கள். அவர்கள் விருப்பத்திற்கு விலையைத் தீர்மானிக்கின்றனர்.”
இக்கட்டான இச்சூழலில் சரக்கை வீட்டிற்கு எடுத்துச் சென்றால் குளிர்பதன கிடங்கில் வைக்க வேண்டும் அல்லது குறைந்த விலைக்கு அவர் விற்க வேண்டும். “என்னால் ஏசிக்கு [குளிர்சாதனப் பெட்டி] செலவு செய்ய முடியாது, ஒரு குவிண்டால் அளவிலான தலா 50 கிலோ கொண்ட இரண்டு பைகளை ஒரு முறை கொண்டு வருவதற்கு 1000 ரூபாய் செலவாகிறது,” என விளக்கும் அவர், குறைந்த விலைக்கு விற்பது தான் ஒரே வழி என்கிறார். மவுனமாக சிறிது நேரம் இருந்துவிட்டு குறைந்த ஒலியில் அவர் பேசினார், “தரகர்களுக்கும், ஏசிக் காரர்களுக்கும் [ஏசி பெட்டக உரிமையாளர்கள்] இடையேயான உறவு நன்றாக தெரிந்ததுதான். இது அவர்கள் இருவருக்குமே சாதகம்தான்.”
விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், தொழிலாளர் கூலி என ஏக்கருக்கு சுமார் ரூ.2 லட்சம் வரைக்கும் ரெட்டி செலவிட்டுள்ளார். அவரும் அவரது மனைவியும் சேர்ந்து வேலை செய்துள்ளனர். 2017-18 மிளகாய் பருவமான அக்டோபர் முதல் மார்ச் மாதத்தில் ஏக்கருக்கு 20 குவிண்டால் கிடைத்தது. சுமார் ரூ.10 லட்சம் செலவில் மொத்தம் சுமார் 100 குவிண்டால் கிடைத்தது. 2015-16 என முந்தைய ஆண்டுகளில் குவிண்டால் விலை மிக அதிகமாக ரூ.12,000-15,000 வரை (சர்வதேச சந்தையில் ஏற்பட்ட திடீர் தட்டுப்பாடு காரணமாக) கிடைத்தது கொஞ்சம் லாபம் அளித்தது. சில ஆண்டுகளில் குறைந்தது ரூ.10,000 கூட கிடைத்தது விவசாயிகளுக்கு நம்பிக்கை அளித்தது.








