“நான் பிறந்ததிலிருந்து இது இப்படித்தான் இருக்கிறது,” என்கிறார் ரத்னவா எஸ். ஹரிஜன். அது ஒரு ஆகஸ்ட் மாதத்தின் குளிர்காலை. தினக்கூலிக்காக அவர் வேலை பார்க்கும் விவசாய நிலத்துக்கு துடிப்புடன் நடந்துச் சென்றுக் கொண்டிருக்கிறார். ஒல்லியாய், உயரமாய் லேசாக குனிந்தபடி அவர் நடக்கும் வேகம், பதின்வயதில் அவருக்கு நேர்ந்த கால் பலவீனத்தையும் மறைக்கக் கூடியதாக இருந்தது.
நிலத்தை அடைந்தவுடன், அவர் கொண்டுச் சென்ற வேலைக்கான உடைகளை வெளியே எடுத்தார். முதலில் அவர் ஓர் அழுக்கு நீலச்சட்டைக்குள் கையை விட்டு சேலையின் மீது அணிந்து கொள்கிறார். பிறகு மகரந்த சேர்க்கை துகள்கள் படாமல் இருக்கவென நீளமான, மஞ்சள் நிற நைட்டி போன்ற உடையை இடுப்பில் கட்டிக் கொள்கிறார். அதற்கு மேல் ஒரு கிழிந்த நீல நிற சிஃப்ஃபான் துணியை முடிந்து பை போல் ஆக்கிக் கொள்கிறார். ஒக்ரா செடியின் ஆண் பூக்களை சேகரிப்பதற்காக அது. ஒரு வெளுத்துப் போன வெள்ளை துண்டை தலையில் மாட்டிக் கொண்டு, 45 வயது ரத்னவா இடது கையில் நூல்களை பிடித்துக் கொண்டு தன் வேலையைத் தொடங்குகிறார்.
ஒரு பூவைப் பறிக்கிறார். மெதுவாக அதன் இதழ்களை மடக்கி ஆண் கூம்பின் மகரந்தப் பொடியை அதில் தடவுகிறார். மகரந்தம் சேர்க்கப்பட்டப் பூவைச் சுற்றி ஒரு நூலைக் கட்டி அடையாளப்படுத்துகிறார். அவரின் முதுகு வளைந்து ஒரு நளினத்துடன் நிலத்தில் இருக்கும் ஒக்ரா செடிகளின் எல்லா பூக்களிலும் மகரந்தத்தை சேர்க்கிறார். கையால் மகரந்தச் சேர்க்கை செய்வதில் அவர் திறன் பெற்றவர். சிறுமியாய் இருந்ததிலிருந்து அந்த வேலையை அவர் பார்க்கிறார்.
ரத்னவா மடிகா சமூகத்தை சேர்ந்தவர். கர்நாடகாவில் பட்டியல் சமூகம் அது. கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தின் ரானிபென்னூர் தாலுகாவிலுள்ள கொனனடலி கிராமத்தின் மடிகா பகுதியில் அவர் வாழ்கிறார்.












