ஒரு வருடத்துக்கும் மேலாக ஜக்காம்புடி கிராமத்திலிருந்து விஜயவாடா நகரத்தின் புன்னமி படித்துறைக்கு தினமும் ஆறு கிலோமீட்டர் தூரம் நடந்து வருகிறார் கொல்லட்டி நாராயணா. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அங்கு இருப்பவர்களுடன் சேர்ந்து, மீன் பிடித்து கரையோரத்தில் விற்கும் வேலையைச் செய்து வருகிறார் அவர்.
27 வயது நாராயணாவுக்கு பார்வைத் திறன் குறைவு. தினமும் வீட்டுக்கு இன்னொரு ஆறு கிலோமீட்டர் நடக்கிறார். “ஆட்டோவுக்கு 40 ரூபாய் செலவழிக்க முடியாததால் நான் நடக்கிறேன்,” என்கிறார் அவர். “ஒருநாளில் 50-100 ரூபாய் கிடைப்பது கூட சிரமம்.” நான்கு மற்றும் இரண்டு வயதுகளில் இருக்கும் அவரின் இரு மகள்களும் கூட பார்வைத் திறன் குறைந்தவர்கள்தான்.
2016ம் ஆண்டின் நடுவே புன்னாமி படித்துறையில் நாராயணா வாழ்ந்து வந்த வீடு இடிக்கப்பட்ட பிறகு, 12 கிலோமீட்டர் தொலைவு தினமும் நடக்கும் நிலைக்கு அவர் ஆளாகியிருக்கிறார். அவர் அப்போது வசித்த சிறிய வீடு அவரின் சகோதரருக்கு சொந்தமானது. அவ்வப்போது வாடகையின் சிறு பகுதியைக் கொடுப்பார். இப்போது அவர் ஜக்காம்புடியின் ஒய்எஸ்ஆர் காலனி வீட்டில் வசிக்கிறார். 1,000 ரூபாய் வாடகைக் கொடுக்கிறார். (அவரின் சகோதரரும் வீடு இடிக்கப்பட்ட பிறகு இடம்பெயர்ந்து விட்டார். ஆனால் அவரின் சிறிய வீட்டில் நாராயணாவின் குடும்பத்துக்கு இடம் இருக்காது.)











