மதுரையில் எங்கள் வீட்டுக்கு முன் ஒரு தெருவிளக்கு கம்பம் உண்டு. பல மறக்க முடியாத உரையாடல்களை அதோடு நிகழ்த்தியிருக்கிறேன். தெருவிளக்குடன் தனித்துவமான உறவு எனக்கு உண்டு. நான் பள்ளிப்படிப்பு முடிக்கும் வரை பல ஆண்டுகளுக்கு எங்கள் வீட்டில் மின் இணைப்பு கிடையாது. 2006ம் ஆண்டில் மின் இணைப்பு கிடைத்தப்போது, நாங்கள் எட்டுக்கு எட்டு அடி பரப்பளவு கொண்ட வீட்டில் வசித்தோம். ஐந்து பேர் ஓரறையில் வசித்தோம். அதனாலேயே நான் தெருவிளக்குக்கு நெருக்கமானேன்.
என்னுடைய குழந்தைப்பருவத்தில் பலமுறை வீடு மாற்றியிருக்கிறோம். குடிசையிலிருந்து மண் வீடு, வாடகை அறை என நகர்ந்து தற்போது 20X20 அடி வீட்டுக்கு வந்திருக்கிறோம். என்னுடைய பெற்றோர் செங்கல் செங்கல்லாக பார்த்து 12 வருடங்கள் கட்டிய வீடு அது. அவர்கள் ஒரு கொத்தனாரை பணிக்கு அமர்த்தினார்கள்தான். ஆனால் அவர்களின் சொந்த உழைப்பைதான் அதற்குள் போட்டார்கள். அந்த வீடு கட்டப்பட்டுக் கொண்டிருக்கும்போதே நாங்கள் குடிபுகுந்தோம். எங்களின் எல்லா வீடுகளும் நெருக்கமாக இருந்தன. தெருவிளக்கின் வெளிச்சக் கற்றைக்குள்ளேயே அவை இருந்தன. சே குவேரா, நெப்போலியன், சுஜாதா மற்றும் பலரின் புத்தகங்களை அந்த தெருவிளக்குக் கொடுத்த வெளிச்சத்தில் அமர்ந்துதான் படித்தேன்.
அதே தெருவிளக்குதான் இப்போது இந்த எழுத்துக்கும் சாட்சியாக இருக்கிறது.






























