கோர்டப்பு தெய்வத்தைப் போல வேடமிட்டவர்களின் நடனத்தைக் காண பெருமுடே கிராமத்தின் அந்த பெரிய வீட்டின் முன் அனைவரும் கூடியிருக்கிறார்கள். கம்பீரமான ஆடை, அணிகலன்கள் மற்றும் முகத்தில் பூசப்பட்ட மஞ்சள் வண்ணத்துடன் – அவர் மிரட்சியை ஏற்படுத்துகிறார்.
அந்த வீட்டின் உரிமையாளர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, சாமியாடிக்கு சடங்கு எண்ணெயைக் கொடுத்து குளிக்கச் செய்கிறார்கள். அவருக்கு உள்ளூர் தலித் சமூகத்தின் பண்பாட்டு நாயகரான கோர்டப்புவைப் போன்ற ஒப்பனை செய்யப்பட்ட பிறகு, அவரது குடும்பத்தினர் மகுடத்தை சூட்டுகின்றனர். கோர்டப்புவின் வீரத்தை பறைசாற்றும் வாய்மொழிக் கதைகளைக் கேட்க அனைவரும் தயாராகின்றனர். அப்போது இரவு மணி 10:30.
கழுத்துப் பட்டி, வளையல்கள், மகுடம், வெண்கலம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட முகக்கவசம், ஒளிவட்டம் பொருத்தப்பட்ட மரம், உலோகத்தாலான தலையணி, தென்னையோலைகள், மலர்கள், கிளிஞ்சல்கள், மூங்கில் மற்றும் துணியாலான அணிகலன்கள், கால்களின் வெண்கலத்தாலான தண்டைகள் ஆகியவற்றை அணிந்துகொண்டு, கையில் நெருப்பெரியும் தீவட்டையைத் தாங்கியபடி – கோர்டப்பு தெய்வம் நடனமாடினார்.
பத்தாண்டுகளுக்கு முன்னால், தக்ஷின கன்னடா மாவட்டத்தின் மங்களூர் தாலுக்காவில், இவ்வகை நடனத்தை ஆடிய கலைஞரின் பெயரை என்னால் நினைவுகூர முடியவில்லை. ஆனால், அதே தாலுக்காவின் படுபேரார் கிராமத்தைச் சேர்ந்த சாமியாடியான தயானந்த் கதால்சர், “நீங்கள் தெய்வத்தின் மீது நம்பிக்கை வைத்தால், அது உங்களுக்கு ஆறுதலைத் தரும்...” என்று சமீபத்தில் கூறினார்.
பத்தாண்டுகளுக்கு முன்னால், அன்றைய இரவில், சாமியாடி வேகமாகவும், ஆக்ரோஷமாகவும் குதித்து நடனமாடி தனது சக்தியைக் காட்டினார். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவரிடம் ஏன் என்னை அழைத்தாய் என்று அவர் கேட்டார். சாமியாடியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் தீவட்டியைப் பிடித்திருக்க, அதன் நெருப்பைத் தொட்டு சாமியாடி தனது கைகளில் பூசிக்கொண்டார். ”சில நேரங்களில் அவர்கள் தகதகக்கும் தனலின் மீது நடப்பார்கள் அல்லது நெருப்பினூடாக ஓடுவார்கள் அல்லது எரிந்து கொண்டிருக்கும் கற்பூரத்தை வாயில் போட்டு விழுங்குவார்கள். இவை எல்லாமே அச்சம் மற்றும் பிரமிப்பை உருவாக்குவதற்காக செய்யப்படுவது” என்கிறார் கதால்சர்.








