கடந்த ஜூன் 2005 அன்று, ஒடிசா மாநில அரசு அம்மாநிலத்தில் அதிக கனிமவளம் கொண்ட பாரதீப் பகுதியின் அருகில் உள்ள பகுதியில், தென்கொரியாவைச் சேர்ந்த இரும்பு உற்பத்தி நிறுவனமான போஸ்கோ உடன் 12 பில்லியன் மதிப்புடைய (ஏறத்தாழ ரூபாய் 65,856 கோடி) இந்தியாவின் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடுத் திட்டத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அந்தத் திட்டத்திற்காக 4,004 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மற்றும் மீன்பிடித்தொழிலை வாழ்வாதாரமாக கொண்ட மக்கள் வாழக்கூடிய எட்டு கிராமங்கள் தாரைவார்க்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது. இதில் 2,598 ஏக்கர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியும் அடங்கும் . மேலும், இந்த இரும்பு ஆலையுடன், ஆலைக்கான தனித்துறைமுகம், அனல் மின் நிலையம் மற்றும் நகரம் ஆகியவை சேர்த்தே உருவாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டு, ஏறத்தாழ எட்டு வருடங்களைக் கடந்துள்ள நிலையிலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முனையும் அதிகாரிகளுக்கு எதிராக இந்த கிராமத்தினர் தங்களது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லால் , மக்களை சமூக ரீதியாக பிரிக்கும் முயற்சியும் நடக்கிறது.
தின்கியா கிராமம் இந்த போராட்டத்தின் இதயமாக செயல்பட்டு வருகிறது. அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தினால் லாபம் தரும் வெற்றிலை, திராட்சைத் தோட்டங்கள், நெல் பண்ணைகள், சமுதாய வனப்பகுதிகள் மற்றும் வீட்டை சூழ்ந்திருக்கும் பண்ணைகள் ஆகியவற்றை இழக்க நேரிடும் என்பதால், இப்பகுதி மக்கள் உறுதிமிக்க அகிம்சை எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அந்த பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் பாதைகளை வழிமறித்து குழிகள் தோண்டியும், தடுப்புகளை அமைத்தும் , இந்தத் திட்டம் எண்ணற்ற விதிகளை மீறுவதாக நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்தும், தங்களின் எதிர்காலம் குறித்த அச்சத்தை வெளிப்படுத்தி அவநம்பிக்கை மிகுந்த மனுக்களையும் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாநில நிர்வாகம் காவல்துறை நடவடிக்கைகள் மூலமாக திராட்சைத் தோட்டங்களை அழித்தும், அண்மையிலுள்ள கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தியும் உள்ளனர். குறிப்பாக அதுபோன்றதொரு வன்முறை கடந்த வாரம் நடந்தேறியும் உள்ளது. போராட்டம் நடைபெற்று வரும் இத்தனை வருடங்களில், மக்களை சிறையில் அடைத்து போராட்டத்தை ஒடுக்குவதற்காக, அந்த கிராமத்தினர் மீது காவல்துறை 200 குற்ற வழக்குகளும் பதிந்துள்ளனர். இதில் நூற்றுக்கணக்கான கிராமத்தினர்கள் மீது போடப்பட்டுள்ள தேசத்துரோகக்குற்றமும் ஆபாச வழக்குகளும் அடங்கும்.
ஆனால் தின்கியா கிராமத்தினர், குறிப்பாக பெண்கள், தங்களது எதிர்ப்பால் இறக்க நேர்ந்தாலும் , போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று கூறுகின்றனர்







