மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டத்திலிருந்து 23 பேர் கொண்ட பழங்குடியின உழவர்கள், நவ.27 அன்று தென் தில்லி நிஜாமுதீன் தொடர்வண்டி நிலையத்தை வந்துசேர்ந்தனர். அரை மணி நேரம் நடந்து சராய் காலேகான் பகுதியில் சிறீ பாலா சாகேப்ஜி குருத்வாராவை அடைந்தனர். குருத்வாரா வளாகத்தில் பாதி முடிக்கப்படாமல் இருந்த கட்டடம், 2018 நவ.29-30 உழவர் விழிப்புணர்வுப் பேரணியில் பங்கேற்கும் அவர்களுக்காக தயார்செய்யப்பட்டு இருந்தது.
யவத்மாலிலிருந்து வந்த உழவர்களுக்கு நவ.27 காலை 10 மணியளவில் முதல் தொகுதியாக இந்த ஏற்பாடு கிட்டியது. அவர்களை வரவேற்று அன்றைய இரவு தங்கவைத்து உணவளிப்பதற்கு அகில இந்திய உழவர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களும் உழவர்களுக்கான தேசம் அமைப்பின் தன்னார்வலர்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.
கோலம் பழங்குடியின உழவர்கள் இங்கு வந்துசேர்வதற்கு, மகாராஷ்டிர- ஆந்திர எல்லையில் கேலாப்பூர் வட்டம், பிம்பல்குட்டி கிராமத்திலிருந்து நந்திகிராம் விரைவுத் தொடர்வண்டியில் ஏழு மணி நேரம் பயணம்செய்து, நவ.26 மாலையில் நாக்பூரை அடைந்தனர். பின்னர் அந்த வழியே கேரளத்திலிருந்து நிஜாமுதீனுக்கு வந்த இன்னொரு தொடர்வண்டியைப் பிடித்து இங்கு வந்துசேர்ந்தனர்.








