மொட மொடாண்டு ஊடாலே
முட்டு சிக்கிய டாங் ஊடாலே
[பதறிப் பதறித் தேடுனா லாபமில்ல
சிந்திச்சு நடைபோடு. தங்கம் கிடைக்கும்]
நீலகிரி மலைகளின் காடுகளில் ஒரு காலத்தில் வசித்த அலு குரும்பர் பழங்குடி மக்கள் சரியான துணையை கண்டறிய விருப்பமான வழியை இந்த பழமொழி சொல்வதாக நினைக்கிறாகள். பக்குவமாய் நிதானமாய் இருப்பதைக் குறித்த இந்தப் பழமொழி ரவி விஸ்வநாதனின் வாழ்க்கைக்கும் பொருந்தியிருக்கிறது. நிதானமாகத் தொடங்கிய அவரது கல்விப் பயணத்தின் விதை, இப்போது கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறப்போகும் அளவுக்கு விருட்சமாகியிருக்கிறது. அலு குரும்பர் சமூகப் பின்னணியில் இருந்து இந்த பட்டம் பெறுவது மட்டுமல்ல. அலு குரும்பர் மொழியின் இலக்கணம் மற்றும் வடிவத்தை முதன்முதலாக ஆவணப்படுத்துவரும் இவர்தான். 33 வயதாகும் விஸ்வா (தன்னை அப்படி அழைப்பதை விஸ்வா விரும்புகிறார்) தனக்கு சரியான மனைவியை தேடிக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி நகருக்கு அருகிலுள்ள அலு குரும்பர் பகுதியான பணகுடியில் தான் வளர்ந்திருக்கிறார் விஸ்வா. காலை 7 மணிக்கு வேலைக்குப் புறப்பட, மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அரவேனு அரசுப்பள்ளிக்கு படிக்கச் சென்றிருக்கிறார்கள் குழந்தைகள்.






