மூக்குக்கண்ணாடி வழியாக உற்றுப் பார்த்துக் கொண்டே, துணிக்குள் சிறிய வட்டக் கண்ணாடியை வைத்துத் தைக்கிறார் டம்மிகமல் கசிமியா. “இந்த சங்கிலித் தையல் மிகவும் கடினமான வேலை. ஏனென்றால் இந்தக் கண்ணாடி நழுவிவிடாமல் இதைத் தடுத்துத் தைக்க வேண்டும்” என்று தன் வீட்டில் அமர்ந்தபடியே சொல்கிறார். தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிட்டிலிங்கி பள்ளத்தாக்கில் இருக்கும் இரண்டு லம்பாடி குடியிருப்புகளில் ஒன்றான அக்கரெ காட்டு டண்டாவில் இருக்கிறது அவரது வீடு.
தனது 60 வயதில் இருக்கும் டம்மிகமல் அல்லது கம்மி 12 வருடங்களாக இன்னொரு மேலும் தீவிரமான நழுவல் நிகழாமல் காப்பாற்றி வருகிறார். அவருடைய தோழி ஆர். நீலாவுடன் சேர்ந்து அவர்கள் சமூகத்து இளம் லம்பாடி பெண்களுக்கு கட்டெரைக் கற்றுக்கொடுத்து அதை அவர்களது இனத்தின் பொது நினைவிலிருந்து நழுவாமல் பார்த்துக் கொள்கிறார். உறுதியான, தொடர்ச்சியான இந்த வருமானம் வேறு ஊர்களுக்கு இடம்பெயர்ந்து போவதிலிருந்து இம்மக்களைப் பாதுகாக்கிறது.
பொதுவாக லம்பாடி பெண்கள், கட்டிடத் தொழிலுக்கும், சிட்டிலிங்கியில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் திருப்பூர் ஜவுளி மில்களுக்கும் இடம்பெயர்ந்து செல்வார்கள். இந்தச் சமூகத்து ஆண்கள் கேரளாவில் கட்டிடத் தொழிலுக்கும், மரம் வெட்டும் வேலைக்கும் செல்வது வழக்கம். சராசரியாக, ஆண்களோ பெண்களோ, இப்படி இடம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களின் மாத வருமானம் 7000 முதல் 15000 வரை இருக்கும்.
தமிழ்நாட்டில், திருவண்ணாமலையிலும், தர்மபுரியிலும்தான் (பின்தங்கிய சமூகம் என்று வரையறுக்கப்பட்ட) லம்பாடி சமூகத்தினர் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். சிட்டிலிங்கியில், கிராமப் பஞ்சாயத்து அதிகாரி 924 லம்பாடிச் சமூகத்தினர் (மற்ற மாநிலங்களில் பஞ்சாராஸ் என்று அழைக்கப்படுகிறார்கள்) வாழ்வதாகச் சொல்கிறார். ஒன்று அல்லது இரண்டு ஏக்கர் நிலத்தை வைத்திருக்கும் சிட்டிலிங்கி லம்பாடி சமூகத்தினர், மழையை நம்பி பயிர் செய்கிறார்கள். கடந்த 30 வருடங்களாக, கரும்பு, நெல் போன்ற பணப் பயிர்களின் மீது கவனம் திரும்பியது. மழை பொய்த்ததால், பணத்திற்கான தேவை அதிகமாகி 15 நாட்களிலிருந்து ஒரு வருடம் வரை இடம்பெயர்ந்து வாழ்வதென்பது கட்டாயமாகிவிட்டது.
”இடம்பெயர்ந்து போவது இந்த சமூகத்தில் வழக்கமான ஒன்று. கட்டெரால் சம்பாதிக்கும் பெண்கள் இருக்கும் குடும்பங்களில் மட்டும் இடப்பெயர்வு குறைவு” என்கிறார் 35 வயது தாய்க்குலம்.











