சிகன்பதாவில் இரவு 10:30 மணிக்கு பூஜை தொடங்கியது. மொத்த கிராமமுமே தூங்கிக் கொண்டிருக்கும் போது சனத் குடும்பத்தினர் மட்டும் பாடல்களையும், மந்திரங்களையும் முழங்கிக் கொண்டிருந்தனர்.
பிளாஸ்டிக் பாயில் காலு ஜங்கலி அமர்ந்தார். அவர் இந்த பூஜையை நடத்த பக்கத்து கிராமமான பாங்ரியிலிருந்து வந்திருக்கிறார். கா தாக்கூர் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த பல விருந்தினர்கள் இந்த மண் வீட்டின் முன் அறையில் கூடி தரையில் அல்லது பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்திருந்தனர். இரவு முழுவதும் பக்திப் பாடல்களைப் பாடி வாணி தேவியை வணங்கும் இந்த பூஜையில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கின்றனர்.
50 வயதாகும் காலுவின் தலைமையில் தான் இந்த பூஜை நடைபெறுகிறது, அறையின் நடுவில் பூஜைக்கான பொருட்களான, அரிசி, செம்புப் பாத்திரத்தில் வைக்கப்பட்ட தேங்காய் சிவப்புத் துணியால் மூடப்பட்டிருந்தது (இதனை ஓர்மால் என்று அவர்கள் அழைக்கின்றனர்) ஊதுபத்திகள் ஆகியவை வைக்கப்பட்டு இருந்தன.
"இந்தச் சடங்கு இறுதிக்கட்டமாக தான் நடத்தப்படுகிறது வைத்தியரின் மருந்துகள் நோயாளிக்கு பலன் கொடுக்கவும் மேலும் தீய கண் திருஷ்டிகளை அழிக்கவும் இது நடத்தப்படுகிறது", என்று காலு உடன் வந்திருந்தவரும், சிக்கன்பதாவில் இருக்கும் பரம்பரை வைத்தியருமான ஜெயித்யா திகா கூறுகிறார்.












