“ஒரு ஆண்டில் குறைந்த எண்ணிக்கையிலான கத்திகளை மட்டுமே என்னால் விற்பனை செய்ய முடிகிறது”, என்கிறார் கோத்தகிரி நகர வீதியில் தகரக் கூரை வேய்ந்த தனது பட்டறையில் அமர்ந்திருக்கும் மோகன ரங்கன். “தேயிலை தோட்டங்களில் சிறிய அளவிலான கத்தி மட்டுமே பயன்படும். பெரிய அளவிலான கலப்பை போன்றவை விவசாய பணிகளுக்குதான் பயன்படும். விவசாயம் பெருமளவு குறைந்து தேயிலை தோட்டங்கள் அதிகரித்து வருகிறது. அதனால் பல நாட்கள் பட்டறைக்கு வந்தும் பணிகள் எதுவும் இருப்பதில்லை”
44 வயதான மோகன ரங்கன், கோட்டா என்னும் பழங்குடி இனத்தை சார்ந்த கடைசி தலைமுறை கொல்லர் ஆவார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகருக்கு சில கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் புது கோத்தகிரி என்னும் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். “27 வருடங்களாக நான் இந்த தொழிலை செய்து வருகிறேன். அதற்கு முன் எனது தந்தை, தாத்தா, அவரது முன்னோர்களும் இதே தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். எத்தனை தலைமுறைகளாக இந்த தொழில் எங்கள் குடும்பத்தால் செய்யப்பட்டு வருகிறது என சரியாக சொல்ல முடியவில்லை”, என கூறுகிறார்.
ஆனால் சமீப காலமாக இந்த பாரம்பரிய தொழில் தேயிலை தோட்டங்களின் வளர்ச்சியால் பின்னடைவை சந்தித்துள்ளது. 1971 முதல் 2008 வரை (2008க்கு பின் தகவல்கள் இல்லை) தேயிலை விவசாயம் செய்யப்படும் நிலத்தில் அளவு 22,651 ஹெக்டரிலிருந்து 66,156 ஹெக்டர் என மும்மடங்கு அதிகரித்துள்ளது. இது இரும்பு பட்டறைகளின் விழ்ச்சிக்கு மிக முக்கிய காரணமாகும்.






