சுனில் குப்தா வீட்டிலிருந்து வேலை பார்க்க முடியாது. அவரின் அலுவலகமான ‘இந்தியாவின் நுழைவாயில்’ பொது முடக்கத்தினால் கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருக்கிறது.
“இதுதான் எங்களுக்கு அலுவலகம். இப்போது நாங்கள் எங்கே போவது?” என தெற்கு மும்பையிலிருக்கும் நினைவுச்சின்னத்துக்கு அருகே இருக்கும் காம்ப்ளக்ஸ்ஸை காட்டி கேட்கிறார்.
பொதுமுடக்கம் தொடங்குவதற்கு முன், காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை சுனில் அந்த சுற்றுலா தளத்தில் காத்திருப்பார். பரிசோதனை மையங்களை கடந்து மக்கள் நுழைவாயிலை நோக்கி வரும்போது அவரும் பிற புகைப்படக் கலைஞர்களும் சென்று அவர்களை வரவேற்பார்கள். கையில் புகைப்பட ஆல்பம் ஒன்று வைத்திருப்பார்கள். வருபவர்களை நோக்கி, ‘ஒரு போட்டோ ப்ளீஸ். வெறும் 30 ரூபாய்தான்’ என்பார்கள்.
இந்த வருடத்தின் ஏப்ரல் மாதத்தின் நடுவே கோவிட் பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கி மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதும் அவர்களுக்கு மீண்டும் வேலை இல்லாமல் போனது. “காலையில் இங்கு வந்தபோது முகத்தில் அடிப்பது போல் ‘அனுமதி இல்லை’ என எழுதியிருந்தது,” என ஏப்ரல் மாதத்தில் கூறினார் 39 வயது சுனில். “வருமானம் ஈட்டவே நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். இப்போது வருமானமே இல்லாமலாகிக் கொண்டிருக்கிறோம். இன்னும் நஷ்டத்தை தாங்கும் அளவுக்கு எனக்கு சக்தி இல்லை.”


















