ராஜூ சௌதுரி ஒரு பல்லுருவக் கலைஞர்- 'பஹுரூபி' என்று வடமொழியில் சொல்லப்படும் பலவுருவத்தோற்றம் தரிக்கும் அபிநயக் கூத்தாடி (bahu-பல, rupi-உருவங்கள்). 40 வயதான இவர், தன் பதினான்காவது வயதிலிருந்து இதைச் செய்து வருகிறார். "நான் நெடுங்காலமாக இதைச் செய்து வருகிறேன். என் மூதாதையர்களில் பலர் பஹுரூபிகள், என் குழந்தைகளும் கூட" என்கிறார்.
இவர் பேடியா என்னும் (பட்டியல்) பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். 2011ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கின்படி, மேற்கு வங்காளத்தின் மொத்தப் பட்டியல் பழங்குடி இனத்தவர் தொகையில் 5.8 சதவிகிதம் வகிப்பவர் பேடியா இனத்தவர். பீர்பம் மாவட்ட லாப்பூர் வட்டத்தைச் சேர்ந்த இந்த விஷய்பூர் கிராமத்தில் சுமார் 40 பேடியா குடும்பங்கள் வசிக்கின்றன.
இங்கே இணைக்கப்பட்டுள்ள காணொலியில், ராஜூ 'தாரா சுந்தரி' என்னும் கற்பனைக் கதாபாத்திரத்தின் வேடத்தில் இருக்கிறார். உள்ளூரில் வழங்கி வரும் கதைகளின்படி தாரா சுந்தரி, ஆதிபராசக்தியான காளியின் அம்சம். இதன் மூலம் பர்த்வான் அரசரின் கதையை விவரிக்கிறார் ராஜு. நேர்விற்கேற்ப மாற்றியமைக்கப்பட்ட கதை; சொந்த வார்த்தைகள், வரிகள், பாடல்களைக் கொண்டு பெரும்பாலும் வங்காள மொழியில் கோர்க்கப்பட்ட விவரிப்பு, படைப்பு. காலில் சதங்கைகள் அணிந்து, அதன் மணிகள் கலகலக்க, ஓங்கிய குரலில், மே மாதத்தின் 40 டிகிரி உச்சி வெயிலில், ஒரு மரக்குச்சியால் தாளம் போட்டுக்கொண்டே பாடி ஆடுகிறார் ராஜு.




