சித்தரஞ்சன் ரே, மேற்கு வங்கத்தின் கடாங் கிராமத்தில் இருந்து 2015 ஆம் ஆண்டு, தனது 28 வயதில், நல்ல ஊதியம் பெற வேண்டும் என்று கேரளாவிற்குப் புறப்பட்டார். அம்மாநிலம் முழுவதும் உள்ள பல இடங்களில் கொத்தனார் ஆக பணியாற்றி, சிறிது பணத்தை மிச்சப் படுத்தினார். பிறகு தனது சொந்த ஊருக்குத் திரும்பி எட்டு பைகா நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வந்தார். அவர் இதற்கு முன்னரே தனது குடும்பத்தின் விவசாய நிலத்தில் பணியாற்றி இருக்கிறார், தவிர சொந்தமாக உருளைக் கிழங்கை பயிரிடுவதில் தனது அதிர்ஷ்டத்தை சோதித்து பார்க்க விரும்பினார்.
"அந்த நிலம் முதன் முறையாக பயிரிடப்பட்டது, எனவே அது அதிக கடின உழைப்பையும் மற்றும் அதிக முதலீடுகளையும் கோரியது", என்று 50களின் முற்பகுதியில் இருக்கும் விவசாயியான அவரது மாமா உத்தம் ரே கூறினார். ஒரு நல்ல அறுவடையின் மூலம் அவர் லாபம் ஈட்டுவர் என்ற நம்பிக்கையில் சித்தரஞ்சன் உள்ளூர் கடன்காரர்களிடமிருந்தும், வங்கியிடமிருந்தும், "மிக அதிக வட்டி விகிதத்தில்" கடன்களை பெற்றார். காலப்போக்கில் அது மொத்தம் 5 லட்சம் ரூபாயாக உயர்ந்தது என்று உத்தம் கூறினார். ஆனால், 2017 ஆம் ஆண்டில் பலத்த மழைக்குப் பிறகு நிலத்தில் நீர் தேங்கி நின்றது. பயிரும் அழிந்தது. இழப்பை எதிர் கொள்ள முடியாமல் 30 வயதான சித்தரஞ்சன் அந்த ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் தேதியன்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்து வைக்க ஆர்வமாக இருந்தனர் என்று ஜல்பைகுரி மாவட்டத்தின் தூப்குரி வட்டத்திலுள்ள அதே கிராமத்தைச் சேர்ந்த, ஐந்து பைகா (1 பைகா என்பது 0.33 ஏக்கர் நிலம் ஆகும்) நிலத்தில் உருளைக் கிழங்கு, நெல் மற்றும் சணல் பயிரிடும் விவசாயியான சிந்தாமோகன் ராய் கூறுகிறார். "அவர் வங்கிக் கடன் பெற தகுதியற்றவர் என்பதால் அவரது சார்பில் அவரது தந்தை கடன் எடுத்துக் கொடுத்தார்". அவரது மகன் இறந்த பிறகு 60 வயதான அவரது தந்தை கடனுடன் போராடி வருகிறார், இறந்த இளைஞனின் தாயாரோ நோய்வாய்பட்டு இருக்கிறார்.
சிந்தாமோகன் குடும்பத்திலும் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். "எனது சகோதரர் ஒரு சாதாரண மனிதர் அவரால் அழுத்தத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை அதனால் 2019 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி அன்று பூச்சிக் கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்", என்று அவர் கூறுகிறார். அவரது சகோதரர் கங்காதருக்கு வயது 51.
"அவர் தனக்குச் சொந்தமான ஐந்து பைகா நிலத்தில் உருளைக் கிழங்கை பயிரிட்டு வந்தார்", என்று 54 வயதாகும் சிந்தாமோகன் கூறுகிறார். "அவர் (வங்கிகளிடம் இருந்தும், தனியார் கடன் கொடுப்பவர்களிடமிருந்தும், உள்ளீட்டு விற்பனையாளர்களிடம் இருந்தும்) கடன் வாங்கி இருந்தார். கடந்த சில பருவ காலங்களில் தொடர்ச்சியான இழப்புகளைச் சந்தித்தார், அந்த நிலைமை அவரால் சமாளிக்க முடியாத அளவுக்கு இருந்தது...", என்று கூறுகிறார் அவர்.
கங்காதரின் நிலத்தின் பெரும்பகுதி தனியார் கடன் கொடுப்பவர்களிடம் அடமானத்தில் இருக்கிறது. அவரது மொத்த கடன் சுமார் 5 லட்சம் ரூபாய். அவரது மனைவி ஒரு இல்லத்தரசி, அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள், மூத்த பெண் கல்லூரியில் படித்து வருகிறார். சகோதரர்களாகிய நாங்களும் கங்காதரின் புகுந்த வீட்டுக்காரர்களும் அவர்களை எப்படியாவது அதிலிருந்து வெளியே கொண்டு வர முயற்சிக்கிறோம்", என்று சிந்தாமோகன் கூறுகிறார்.







