தாளபிராவில் வசிப்பவர்களும் வனத்தை அழிப்பதற்கான தங்கள் கிராமத்தின் கிராம சபை ஒப்புதல் தீர்மானம் போலியாக தயாரிக்கப்பட்டிருக்கிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து அக்டோபர் மாதம் அவர்கள் மாநில அரசின் பல்வேறு அதிகாரிகளுக்கு எழுதி அனுப்பிய எழுத்துப்பூர்வ புகார்களை காண்பிக்கின்றனர். "இவை அனைத்தும் மோசடி மூலம் செய்யப்படுகிறது. இந்தக் காடு வெட்கப் படுவதற்கு நாங்கள் ஒருபோதும் ஒப்புதல் அளிக்கவில்லை", என்று வார்டு உறுப்பினரான சுஷ்மா பத்ரா கூறுகிறார். மாறாக வன உரிமைகள் சட்டத்தின் கீழ் வனத்திற்கான எங்கள் உரிமைகளை அங்கீீீகாரம் செய்ய வேண்டி, எங்கள் தாளபிரா கிராம வனக் குழு, 2012 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியது, மேலும் அதன் நகலை நாங்கள் எழுதிய ஒப்புதலுக்கான மோசடி பற்றிய எழுத்துப்பூர்வ புகாரில் இணைத்து ஒப்படைத்துள்ளோம்", என்று கூறினார்.
தாளபிரா வன அழிப்பிற்கான அனுமதி ஆவணங்களை ஆய்வு செய்த புதுதில்லியின் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான காஞ்சி கோஹ்லி, பொதுவாகவே வனத்துறையின் வனத்தை பிற பயன்பாடுகளுக்கு திசை திருப்பும் செயல்முறைகள் வெளிப்படையானதாக இருக்காது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆய்வறிக்கைகள் மற்றும் ஒப்புதலுக்காக பரிந்துரைகள் ஆகியவை கிடைப்பதில்லை. தாளபிரா விசயத்திலும் இது தான் பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. மரம் வெட்டுதல் துவங்கிய போது தான் வனப் பகுதியில் நடைபெறும் சுரங்கப் பணியின் தீவிரத்தை கிராம மக்கள் உணர்ந்திருக்கின்றனர். அவர்களிடம் பரம்பரை உரிமைகளுக்கான உணர்வு மேலோங்கி இருக்கிறது", என்று கூறுகிறார்.
ஆவணங்களைப் படித்துப் பார்த்தால் ஆய்வறிக்கைகள் சாதாரணமாகவும் ,மதிப்பீடுகள் துண்டு துண்டாகவும் நடைபெற்றிருக்கிறது என்பதும் தெளிவாக வெளிப்படுகிறது என்று கோஹ்லி கூறுகிறார்.1.3 லட்சம் மரங்களை வெட்டுவதன் தாக்கம் மிகக் குறைவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது> அது ஒரு போதும் கேள்விக்கு உட்படுத்தப்படவில்லை. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வன ஆலோசனை குழுவால் கிராமசபை தீர்மானங்கள் சரி பார்க்கப்படவில்லை. மொத்தத்தில், வனத்தை பிற பயன்பாட்டிற்கு திசைதிருப்பும் செயல்பாட்டில் சட்டபூர்வ ஓட்டைகள் இருப்பது தெளிவாக புலனாகிறது", என்று கூறுகிறார்.
கிராமவாசிகளின் போராட்டங்களுக்கு அதிகாரிகள் செவிசாய்த்தே ஆக வேண்டும் என்று ரஞ்சன் பாண்டா கூறுகிறார். "நிலக்கரி தான் பருவநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் மிகப்பெரிய குற்றவாளி. பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த, நிலக்கரி எரி மின் உற்பத்தி நிலையங்களை நிறுத்துவது பற்றி மொத்த உலகமுமே சிந்தித்து வருகிறது", என்று கூறினார்.
வன உரிமைச் சட்டத்தை கிராமங்களில் உள்ள மக்களுக்கு மத்தியில் விளம்பரப்படுத்த அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எங்களது சொந்த முயற்சியில் தான் உரிமை கோரலை நாங்கள் தாக்கல் செய்தோம். "எந்த ஒரு சட்டமும் உருவாக்கப்படுவதற்கு முன்பே இந்த காட்டை நாங்கள் தான் பாதுகாத்து வந்தோம்", என்கிறார் திலீப் சாகு. கிராமவாசிகளாகிய நாங்கள் அந்த நிறுவனத்திற்கு எங்களது காடுகளை அழிப்பதற்கான ஒப்புதலை அளித்துவிட்டோம் என்று அரசாங்கம் கூறுகிறது. நான் அவர்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன், நாங்களே ஒப்புதல் கொடுத்திருந்தால், மரத்தை வெட்டுவதற்கு அந்நிறுவனத்திற்கு ஆதரவாக இவ்வளவு போலீஸ் படையை எதற்கு எங்களது கிராமங்களுக்கு அரசு அனுப்ப வேண்டும்?" என்று கேட்கிறார்.
பின் சேர்க்கை: தாளபிரா நிலக்கரி சுரங்கப் பகுதியில் மரம் வெட்டுவது போன்ற எந்த செயல்பாடுகளிலும் தங்களது நிறுவனம் ஈடுபடவில்லை என்று அதானி குழுமம் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே அந்த நிலையை பிரதிபலிக்கும் வகையில் மேற்கண்ட கட்டுரை 2020 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி புதுப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழில்: சோனியா போஸ்