உத்தரகாண்டின் சம்பாவாட் மாவட்டம் கடியுரா கிராமக் குன்றுகளில் சுட்டெரிக்கும் வெயிலில் கண்களையும் நெற்றியையும் சுருக்கியபடி கைத்தடி உதவியில் தள்ளாடி தள்ளாடி நடக்கிறார் தாரி ராம். குடலிறக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவரிடம், 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டானக்பூர் அரசு மருத்துவமனை அல்லது மேலும் தொலைவில் உள்ள ஹல்துவானிக்குச் சென்று அறுவை சிகிச்சை செய்வதற்கு பணமில்லை.
“என்னால் மாதத்திற்கு ஒரு ரூபாய் கூட சம்பாதிக்க முடியாது,” என்கிறார் அவர். 67 வயதாகும் தாரி ராம் கல் உடைக்கும் வேலை பார்த்த்தவர். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மாநில அரசிடம் பெறத் தொடங்கிய ரூ.1000 முதியோர் உதவித்தொகையைத் தான் முழுமையாக நம்பியுள்ளார். அதுவும் சரியாக அக்டோபர் 2016 அக்டோபர் முதல் வங்கிக் கணக்கிற்கு வருவது நின்றுப் போனது. முதியோர் உதவித்தொகை திட்டத்தில் உள்ளவர்கள் அந்தந்த மாவட்ட சமூக நலத்துறையிடம் தங்களின் ஆதார் தகவல்களை செலுத்தத் தவறியதால் மாநில அரசு அதை நிறுத்திவிட்டது.
2017 ஏப்ரல் மாதம் தனது கிராமத்திலிருந்து சுமார் 65 கிலோமீட்டர் பயணம் செய்து சம்பாவாட் நகரில் உள்ள அத்துறையில் தனது தகவல்களை தாரி ராம் பதிவு செய்துள்ளார். அருகில் உள்ள 10 கிராமங்களின் மையப்பகுதியாக உள்ள பிங்கிராராவில் தொடங்கப்பட்ட தனியார் மையத்தில் மூன்றாண்டுகளுக்கு முன்பு அவர் ஆதார் அட்டைப் பெற்றார். அவர் மிகவும் பாதுகாப்புடன் பிளாஸ்டிக் பைக்குள் வைத்திருக்கும் அட்டையில் ‘தானி ராம்’ என்று பெயர் இடம்பெற்றுள்ளது. இப்பெயர் சமூக நலத்துறையிடம் உள்ள அவருடைய பதிவுகளுடன் பொருந்திப் போகவில்லை. இதனால் அவரது உதவித்தொகை நிறுத்தப்பட்டது.








