அக்டோபர் 2022-ல் பலவீனமான ஒரு முதியப் பெண் பெல்லாரியின் வட்டு கிராமத்திலுள்ள சமூக மையத்தின் மேடையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அவரது முதுகு ஒரு தூணில் சாய்ந்திருக்கிறது. கால்களை நீட்டி அமர்ந்திருக்கிறார். சந்தூர் தாலுகாவின் மலைப்பாங்கான 28 கிலோமீட்டர் தூரப் பயணம் அவருக்கு சோர்வை அளித்திருக்கிறது. அவர் மீண்டும் ஒரு 42 கிலோமீட்டர் அடுத்த நாள் பயணிக்க வேண்டும்.
சந்தூரின் சுசீலாநகர் கிராமத்தை சேர்ந்த சுரங்கத் தொழிலாளரான ஹனுமாக்கா ரங்கண்ணா, பெல்லாரி மாவட்ட சுரங்கத் தொழிலாளர் சங்கம் ஒருங்கிணைத்திருக்கும் இரண்டு நாள் பாதயாத்திரையில் இருக்கிறார். வடக்கு கர்நாடகாவின் பெல்லாரியில் இருக்கும் துணை கமிஷனர் அலுவலகத்தில் தங்களின் கோரிக்கைகளை சமர்ப்பிக்க போராட்டக்காரர்கள் 70 கிலோமீட்டர் நடந்து செல்கின்றனர். போதுமான அளவு நிவாரணமும் மாற்று வாழ்வாதாரமும் கேட்டு பிற சுரங்கத் தொழிலாளர்களுடன் சேர்ந்து தெருவுக்கு அவர் வந்திருப்பது கடந்த 10 வருடங்களில் இது 16வது முறை ஆகும்.
1990களின் பிற்பகுதியில் பெல்லாரியில் வேலையிலிருந்து தூக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பெண் தொழிலாளர்களில் அவரும் ஒருவர். “எனக்கு இப்போது 65 வயது என வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு வேலை போய் 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது,” என்கிறார் அவர். பலர் நிவாரணப் பணத்துக்கு காத்திருந்தே இறந்து போய்விட்டனர்.. என் கணவர் கூட இறந்துவிட்டார்.”
“வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்கள்தான் சபிக்கப்பட்டவர்கள். இந்த சபிக்கப்பட்டவர்களுக்கேனும் நிவாரணம் கிடைக்குமா அல்லது இறந்துவிடுவோமா என தெரியவில்லை,” என்கிறார் அவர். “போராடுவதற்காக நாங்கள் வந்திருக்கிறோம். கூட்டம் நடக்கும்போதெல்லாம் நான் கலந்து கொள்வேன். இந்த ஒருமுறை கடைசியாக முயன்று பார்ப்பதென நினைத்திருக்கிறோம்.”















