எஸ். என். கோபாலா தேவி கூறுகிறார், "என் குடும்பம் ஒரு தனி நுழைவாயிலுடன் கூடிய தனி அறையைக் கொண்ட ஒரு வீட்டைக் கண்டுபிடித்தது”. அது 2020ஆம் ஆண்டு மே மாதம்; சில குடும்பங்கள் மற்ற குடும்பத்தினரை பாதுகாக்க கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தபோது - மிகவும் ஆபாயம் நிறைந்த அவரது பணியில், அவர்களது குடும்பத்தினரின் சுமையையும் எளிதாக்கினார்.
50 வயதான கோபாலா தேவி ஒரு செவிலியர். சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் கோவிட் வார்டில் பணிபுரியும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காலத்தில் கணிசமான நேரத்தை செலவிட்ட 29 வருட அனுபவமுள்ள செவிலியர். அதே நகரத்தில் அருகிலுள்ள புலியாந்தோப்பில் உள்ள ஒரு சிறப்பு கோவிட் பராமரிப்பு மையத்தின் ஒரு குறுகிய காலத்திற்கு அவர் பொறுப்பேற்று இருந்தார்.
இப்போது, ஊரடங்கு காலம் தளர்த்தப்பட்ட பிறகு, பல விஷயங்கள் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பினாலும், கோபாலா தேவி கோவிட் -19 வார்டில் பணியாற்றும் போது பெரும்பாலும் தனிமைப்படுத்தலில் நேரத்தைச் செலவிட வேண்டியிருக்கும். "என்னைப் பொறுத்தவரை, ஊரடங்கு இன்னும் தொடர்கிறது," என்று அவர் சிரிக்கிறார். "செவிலியர்களைப் பொறுத்தவரை, அதன் முடிவு இன்னும் வெகு தொலைவில் உள்ளது."
பல செவிலியர்கள் இதை நிருபரிடம் கூறியது போல்: "‘எங்களுக்கு எப்போதும் ஊரடங்கும் வேலையும் உள்ளது."
"என் மகளுக்கு செப்டம்பரில் திருமணம் நடந்தது, முந்தைய நாள் மட்டுமே நான் விடுப்பு எடுத்தேன்", என்று கோபாலா தேவி கூறுகிறார். "எனது கணவர் உதய குமார் திருமணத்தின் முழுப் பொறுப்பையும் அவரது தோள்களில் ஏற்றுக் கொண்டார்." குமார் சென்னையின் மற்றொரு மருத்துவமனையான சங்கரா நேத்ரயலாவின் கணக்கு பிரிவில் பணிபுரிகிறார். "அவர் என் தொழிலின் நெருக்கடிகளை புரிந்துகொள்கிறார்", என்று அவர் கூறுகிறார்.
அதே மருத்துவமனையில் கோவிட் வார்டில் விடுப்பு எடுக்காமல் பணிபுரிந்ததற்காக விருது வென்றவர் 39 வயதான தமிழ் செல்வி. "தனிமைப்படுத்தப்பட்ட நாட்களைத் தவிர, நான் ஒருபோதும் விடுப்பு எடுக்கவில்லை. எனது விடுமுறை நாட்களில்கூட நான் வேலை செய்தேன், ஏனென்றால் பிரச்சினையின் தீவிரத்தை நான் புரிந்துக்கொண்டுள்ளேன், ”என்று அவர் கூறுகிறார்.
"என் இளம் மகன் ஷைன் ஆலிவரை விட்டு, பல நாட்கள் தனித்திருந்த வலி மிகவும் ஆழமானது. சில நேரங்களில் நான் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறேன். ஆனால் இந்த தொற்றுக்காலத்தில் நாங்கள் முன்னணி பணியாளர்களாக இருப்பது முக்கியம் என்று நினைக்கிறேன். எங்கள் நோயாளிகள் தங்கள் குடும்பங்களுக்குத் திரும்பிச் செல்கிறார்கள் என்று அறியும்போது ஏற்படும் மகிழ்ச்சி - என் குடும்பத்திலிருந்து விலகியிருப்பதற்கு ஒரு மதிப்பை ஏற்படுகிறது. ஆனால், எங்களின் 14 வயது சிறுவனை நன்றாக கவனித்துக்கொள்வதற்கும், என் பணி என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்கும் என் கணவர் இருக்கிறார். இல்லையெனில், இது சாத்தியமில்லை. ”











