“ஊரடங்கால் வேலையிழந்துள்ள எங்களைப் போன்றோருக்கு ஜானகீயா ஹோட்டல் பெரிதும் உதவி வருகிறது“ என்கிறார் திருவனந்தபுரம் எம். ஜி. சாலை அருகே உள்ள கடையில் மதிய உணவு பொட்டலம் வாங்குவதற்கு வரிசையில் காத்திருக்கும் ஆர். ராஜூ.
ரூ. 20க்கு அளிக்கப்படும் சாதம், மூன்று வகையான குழம்புகள், காய்கறி வறுவல் அடங்கிய மதிய உணவை வாங்குவதற்கு 55 வயதாகும் தச்சுப் பணியாளர் ராஜூ ஒரு மாதத்திற்கும் மேலாக தினமும் மூன்று கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டி ஜானகீயா ஹோட்டலுக்கு வந்து செல்கிறார். “இந்த உணவுகள் சிறப்பாக உள்ளது” என்கிறார் அவர்.
“ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் நான் மிகவும் கவலைப்பட்டேன்” என்று சொல்லும் ராஜூ, அப்போது முதல் வேலையிழந்துள்ளார். ”என்னிடம் உள்ள சிறிதளவு சேமிப்பில் இரண்டு மாதங்களுக்கு உணவு வாங்கிக் கொள்ள முடியும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. இப்போது இந்த உணவுக்காக எனக்கு மாதம் ரூ.500 மட்டுமே செலவாகிறது.”
ஜானகீயா ஹோட்டலின் மலிவு விலை மதிய உணவையே கால் சென்டரில் பணியாற்றும் டி.கே. ரவிச்சந்திரன் சார்ந்துள்ளார். எம்.ஜி சாலையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவனந்தபுரத்தின் பெட்டா பகுதியில் ரவீந்திரன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மதிய உணவுகளுக்கு தனது அலுவலக கேன்டீனையே அவர் நம்பியிருந்தார். தேசிய அளவிலான ஊரடங்கு மார்ச் 25ஆம் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே கேரளாவில் மார்ச் 23ஆம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் அவரது கேன்டீனும் மூடப்பட்டது. “பிற உணவகங்கள் மிகவும் விலை உயர்ந்தது. கொண்டு வந்து கொடுப்பதற்கான கட்டணமும் அதிகம்” என்கிறார் ரவீந்திரன். அவர் சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொல்லத்திலிருந்து இரண்டாண்டுகளுக்கு முன்பு இங்கு குடியேறியவர்.
ஜானகீயா ஹோட்டலில் ராஜூவும், அவரும் வந்திருந்தபோது 10 பெண்கள் கொண்ட குழு உணவுப் பொட்டலங்களை தயார் செய்து கொண்டிருந்தனர். அன்றாடம் அவர்கள் 500 உணவுப் பொட்டலங்களை தயார் செய்கின்றனர். பிளாஸ்டிக் காகிதத்தில் சாதத்தை வைத்து செய்தித்தாள் கொண்டு மடிக்கின்றனர். குழம்புகள் சிந்தாமல் இருக்க சில்வர் ஃபாயில் கொண்டு மூடுகின்றனர். திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10 முதல் 5 மணி வரை மக்களின் ஹோட்டல் (ஜானகீயா) பார்சல் மட்டுமான சேவையை அளிக்கிறது.











