“இந்த இயந்திரங்கள் முன்பே கொண்டு வரப் பட்டிருந்தால், என் குழந்தைகளின் தந்தை அவர்களை விட்டு போயிருக்க மாட்டார். அவற்றால் இப்போது எனக்கு எந்த பயனும் இல்லை. குறைந்தபட்சம் பிற பெண்களுக்கேனும் பயன்படும். அவர்கள் வீட்டு ஆண்கள் மலக்குழிகளில் இனி இறக்க மாட்டார்கள். நான் துயருற்ற மாதிரி வேறு யாரும் துயருறக் கூடாது,” என ராணி சொல்லிவிட்டு அமைதியாகிறார்.
மனிதர்களே மனிதக் கழிவை அகற்றும் கொடுமை மற்றும் தொடர் மலக்குழி மரணங்கள் ஆகியவற்றை எதிர்த்து தேசிய அளவில் முன்னெடுக்கப்பட்ட சஃபாய் கரம்சாரி அந்தோலன் இயக்கத்தின் நிகழ்வு தில்லியில் கடந்த வருடம் நடந்தபோது, அங்கு படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த ராணியை முதன்முறையாக சந்தித்தேன். மனிதரே மனிதக் கழிவை அகற்றும் போக்குக்கு மாற்றாக பல தொழில்நுட்ப தீர்வுகள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த 36 வயது ராணி நெகிழிப் பையிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்தார். அது அவரது இணையரான 30 வயது அனில் குமாரின் புகைப்படம். வெள்ளை நிற துப்பட்டாவை கொண்டு புகைப்படத்தை துடைத்தவர் அமைதி இழந்தார். அவரது குழந்தைகளான ஏழு வயது லஷ்மி 11 வயது கவுரவ் மற்றும் 2.5 வயது சோனம் ஆகியோருடன் மேலும் கீழுமாக நடந்து கொண்டிருந்தார்.
குடும்ப உறுப்பினர் ஒருவரை இந்தியாவின் மலக்குழிகளுக்குள் தொலைத்த பெண், இழப்பை கடக்கும் முயற்சிக்குள் செல்ல முடிவதில்லை. நீதிக்கும் நஷ்ட ஈட்டுக்கும் குடும்பத்தின் வாழ்தலுக்கும் போராட வேண்டியிருக்கிறது. ராணியின் நிலை இன்னும் கொடுமையானது. தென்மேற்கு தில்லியின் தப்ரியில் இருக்கும் அவரின் வீட்டுக்கு சென்ற போது இன்னும் பல விஷயங்களை பேசினோம்.







