அஸ்தமனத்துக்காக அவர் காத்திருக்கவில்லை. ஓரறை சமையற்கட்டுக்கு வெளியே அமர்ந்திருந்த ரண்டாவனி சுர்வாசே திக்கற்ற திசையில் பார்த்துக் கொண்டிருந்தார். சூரியன் அஸ்தமித்து தெருவிளக்குகளும் எரியத் தொடங்கிவிட்டன. துயரப்புன்னகையுடன் அவர், “இந்த இடத்தில் அமர்ந்து கொண்டுதான் என் கணவர் கடவுளர் பாடல்களை பாடிக் கொண்டிருப்பார்,” என்கிறார்.
இந்து மத கடவுள் விதாலை புகழ்ந்து பாடுவதுதான் அவரின் கணவரான பிரபாகர் சுர்வாசேவுக்கு பிடித்த பொழுதுபோக்கு. மகாராஷ்டிராவின் போக்குவரத்து கழகத்தில் எழுத்தராக பணிபுரிந்து இரண்டு வருடங்களுக்கு முன்புதான் 60 வயதானபோது ஓய்வு பெற்றார். அப்போது தொடங்கி, பீட் மாவட்டத்தில் இருக்கும் பார்லி டவுனிலுள்ள வீட்டில் ஒவ்வொரு மாலையும் பிரபாகர் பாடி அண்டை வீட்டாருக்கு உற்சாகம் கொடுப்பார்.
ஏப்ரல் 9, 2021 அன்று கோவிட் தொற்றுக்கான அறிகுறிகள் அவரிடம் புலப்பட்டன.
இரண்டு நாட்கள் கழித்து, 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சுவாமி ராமானந்த் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பிரபாகர் சேர்க்கப்பட்டார். பத்து நாட்கள் கழித்து மூச்சு திணறி அவர் இறந்துபோனார்.
அவரின் மரணம் திடுமென நேர்ந்தது. “காலை 11.30 மணிக்கு அவருக்கு பிஸ்கட்டுகள் கொடுத்தேன்,” என்கிறார் அவரின் உறவினரான 36 வயது வைத்தியநாத் சுர்வாசே. “பழச்சாறு கூட அவர் கேட்டார். இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். நன்றாகதான் இருந்தார். பிற்பகல் 1.30 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக சொன்னார்கள்.”
இடைப்பட்ட நேரத்திலும் வைத்தியநாத் மருத்துவமனை வார்டில் இருந்திருக்கிறார். ஆக்சிஜன் அளவு பிற்பகலில் குறையத் தொடங்கியது என்கிறார் அவர். அதுவரை பேசிக் கொண்டிருந்த பிரபாகர் சுவாசிக்க திணறினார். “நான் மருத்துவர்களை அழைத்தேன். ஆனால் எவரும் பொருட்படுத்தவில்லை,” என்கிறார் வைத்தியநாத். “கொஞ்ச நேரம் மூச்சு திணறிய பிறகு அவர் இறந்து போனார். நான் நெஞ்சில் அழுத்தினேன். கால்களை தேய்த்தேன். ஒன்றும் நடக்கவில்லை.”










